தவெக மக்கள் சந்திப்பு.. நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றம்.. வேலூரில் 4900 பேருக்கு மட்டுமே அனுமதி..
TVK Meeting: கடந்த முறையில் சேலத்தில் நடைபெற்ற விஜயின் மக்கள் சந்திப்பின் போது வடமாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த முறை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பந்தல் அமைத்து நாற்காலிகள் போடப்பட்டு, தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோப்பு புகைப்படம்
பிப்ரவரி 20, 2026: வேலூரில் வரக்கூடிய பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற இருந்த தமிழக வெற்றி கழகத்தின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் 4,900 நிர்வாகிகளுக்கு க்யூஆர் கோடு (QR Code) உடனான பாஸ் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழலில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இதில் தமிழக வெற்றி கழகம் தனது முதல் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தனித்து களம் காணும் தவெக:
முக்கியமாக, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்திக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரையில், 2026 சட்டமன்றத் தேர்தலை தனித்து சந்திக்க திட்டமிட்டுள்ளது. ஆட்சியில் அதிகாரம் வழங்கப்படும் என தலைவர் விஜய் குறிப்பிட்டிருந்த சூழலில், இதுவரை எந்தக் கட்சியும் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பதற்கு முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: புதிய கட்சியை தொடங்கினார் பண்ருட்டி ராமச்சந்திரன்.. “ஓபிஎஸ் அத்தியாயம் முடிந்ததாக காட்டம்”..
இது ஒரு பக்கம் இருக்க, தேர்தல் ஆணையத் தரப்பில் தமிழக வெற்றி கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பை மேற்கொண்டார் தலைவர் விஜய்.
வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு – நிபந்தனைகள் என்ன?
இந்த நிலையில், வேலூரில் வரக்கூடிய பிப்ரவரி 23 ஆம் தேதி மக்கள் சந்திப்பை திட்டமிட்டு இருந்தார். ஆனால், இந்த மக்கள் சந்திப்பு நிர்வாகிகள் சந்திப்பாக மாற்றப்பட்டுள்ளது. போலீஸ் நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட செயலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் அகரம் சேரியில் பிப்ரவரி 23 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த கூட்டத்திற்கு காவல்துறை தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளன. 33 ஏக்கர் பரப்பளவிலான விழா இடத்தை நேரில் ஆய்வு செய்த காவல்துறை, 20 முக்கிய நிபந்தனைகள் விதித்துள்ளது. குறிப்பாக, நிகழ்ச்சியில் அதிகபட்சமாக 4,900 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் கூட்டத்தை முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பதற்றமான வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை… தேர்தல் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!
மேலும், கூட்ட நெரிசலை தவிர்க்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 4,900 நிர்வாகிகளுக்கு QR கோடு உடனான பாஸ் வழங்கப்பட்டு, அது ஸ்கேன் செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகள் தீவிரம்:
கடந்த முறையில் சேலத்தில் நடைபெற்ற விஜயின் மக்கள் சந்திப்பின் போது வடமாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த முறை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பந்தல் அமைத்து நாற்காலிகள் போடப்பட்டு, தடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதே சமயம், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக வேலூர் செல்ல உள்ள நிலையில், அவரது வாகனங்களை யாரும் பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் விஜயை சந்திப்பதற்கு வர வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
அகரம் சேரியில் இதற்காக நிலம் சமன் செய்யப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்த தனி இட வசதியும் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.