சென்னை, ஏப்ரல் 30, 2026: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சென்னை பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் போது, “மே 4ஆம் தேதி வெற்றி பெற்ற பிறகு நேராக பனையூருக்கு வாருங்கள்; உங்களுக்காக நான் இங்கு காத்திருப்பேன்” என அவர் பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை சந்தித்துள்ளது.
கருத்துக்கணிப்பில் தவெகவிற்கு எத்தனை இடங்கள்?
நேற்றைய தினம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில் பெரும்பாலான நிறுவனங்கள் தமிழக வெற்றிக் கழகம் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்றும், 15 முதல் 30 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும் கணித்துள்ளன. குறிப்பாக சில நிறுவனங்கள் மட்டும் தமிழகத்தில் ஆட்சியை அமைக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறியுள்ளன.
மேலும் படிக்க: உழைப்பாளர் தினம்.. வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி..
வேட்பாளர்களுடன் விஜய் ஆலோசனை:
இந்த நிலையில், மே 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜய் வேட்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் அவர், “வாக்கு எண்ணிக்கையின் போது அனைவரும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நாம் அனைவரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வெற்றி பெற்ற பிறகு வேறு எங்கும் செல்லாமல் நேராக பனையூருக்கு வாருங்கள்; நான் இங்கு காத்திருக்கிறேன்” என கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை..
மே 4ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் மூலம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவு மற்றும் அந்தக் கட்சி கைப்பற்றும் இடங்களின் எண்ணிக்கை தெளிவாக தெரிய வரும்.