பிரச்சாரம் ரத்து – திமுக நெருக்கடி தருகிறது – விஜய் பரபரப்பு அறிக்கை
TVK VIjay : விஜய்யின் பிரச்சாரம் தொடர்ந்து ரத்து செய்யப்படுவது தொடர்கதையாகி வரும் நிலையில், தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், திமுக அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடி தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜய்
சென்னை, ஏப்ரல் 18 : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் வெகு சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் பிரச்சாரம் செய்ய ஏப்ரல் 21, 2026 அன்று கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்த தேர்தலில் புதிதாக களமிறங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், எடப்பாடி தொகுதியில் வேட்பாளர் பின் வாங்கிய நிலையில், மீதமுள்ள 233 தொகுதிகளில் தனித்து களம் காணுகிறது.
இந்த நிலையில் விஜய் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உருவாகியுள்ளது. ஆனால் விஜய்யின் பிரச்சாரம் அடிக்கடி ரத்து செய்யப்படுவது அக்கட்சியினரிடையே கவலையை அதிகரித்துள்ளது. குறிப்பாக காவல்துறை அனுமதித்தும் விஜய் பிரச்சாரத்தை ரத்து செய்வதாகவும் இது அக்கட்சிக்கு பின்னடைவாக அமைய வாய்ப்பிருப்பதாகவும் அக்கட்சி தொண்டர்களும் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : பெரம்பூர் களத்தில் விஜய்.. இன்று வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிக்க திட்டம்.. உற்சாகத்தில் தொண்டர்கள்!!
விஜய் வெளியிட்ட அறிக்கை
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம்.
தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.
திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம்,…
— TVK Vijay (@TVKVijayHQ) April 18, 2026
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை. திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது.
‘திமுகவிற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி’
தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது. இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் பாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் திமுகவிற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு.
தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது.
கடைசி நேரம் வரை காத்திருக்க செய்து, அனுமதி கடிதத்தைத் தாமதமாக அளித்து, நமக்கான பிரசார முன்னேற்பாடுகளை செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் த.வெ.க.வின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிட செய்து மக்களைக் குழப்புவது என்று திமுகவின் பரம்பரை தில்லுமுல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.
இதையும் படிக்க : ஓட்டு வீட்டில் இருந்த செங்கோட்டையனுக்கு பங்களா வீடு-கல்லூரி எப்படி வந்தது… எடப்பாடி கடும் விமர்சனம்!
பவள விழா பாப்பா.. என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்… நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் த.வெ.க. ஒன்றும் பழைய பார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. த.வெ.க.விற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது.
த.வெ.க.வின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்கு தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான். ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன் பாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.