ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் பெரிய மனது முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது – செல்வப்பெருந்தகை..
காங்கிரஸ் கட்சிக்கு 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க சில இடங்களை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்ற முடிந்தது. எனவே, இந்த முறை காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட்கும் தொகுதிகளை திமுக வழங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 8, 2026: சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. குறிப்பாக, திமுக–காங்கிரஸ் கூட்டணிக்கான இழுபறி தொடர்ந்து வருவதாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், திமுக–காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித இழுபறியும் இல்லை என்றும், கேட்கும் தொகுதிகளை வழங்க திமுக தயாராக உள்ளது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அதேபோல், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுப்பதற்கும் முதல்வர் ஸ்டாலின் முழு மனதுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில், அதிமுக மற்றும் திமுக தங்களது கூட்டணி கட்சிகளை 90 சதவீதம் அறிவித்துள்ள சூழலில், தற்போது தொகுதி பங்கீடு மட்டுமே எஞ்சியுள்ளது.
திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்:
திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில், காங்கிரஸ் கட்சிக்கு 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் குறிப்பிடத்தக்க சில இடங்களை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்ற முடிந்தது. எனவே, இந்த முறை காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், கேட்கும் தொகுதிகளை திமுக வழங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க: விருப்ப மனுக்கள் பெறுவதில் தவெகவினர் ஆர்வம்.. 20,000 பேர் பதிவிறக்கம்.. முடங்கிய இணையதளம்..
ஆட்சி அதிகாரத்தில் பங்கு – முதல்வருக்கு பெரிய மனது:
இந்தச் சூழலில், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “திமுக–காங்கிரஸ் கூட்டணியில் எந்தவித இழுபறியும் இல்லை. கேட்கும் தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காலை உணவுத் திட்டத்தை கொண்டு வந்த முதலமைச்சருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கும் பெரிய மனது உள்ளது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் உரிமை அனைத்து கட்சிகளுக்கும் இருக்கிறது. ஆனால், கூட்டணி குறித்த இறுதி முடிவை அகில இந்திய தலைமை தான் எடுக்கும்” என சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி ஆலோசனை:
இந்த நிலையில், வரக்கூடிய பிப்ரவரி 10ஆம் தேதி டெல்லியில் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். திமுக கூட்டணியில் பெரிய மாற்றம் எதுவும் இல்லாத சூழலில், காங்கிரஸ் தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அதிகாலையில் தொடரும் பனிமூட்டம்.. படிப்படியாக உயரும் வெப்பநிலை.. வானிலை சொல்வது என்ன?
இதனால், தமிழக வெற்றி கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், திமுகவுடன் கூட்டணியில் இருந்தால் தான் காங்கிரசுக்கு அரசியல் பலம் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுமையுடன் காத்திருந்து பார்க்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.