புதுச்சேரியில் பெண்களுக்கு இலவச பேருந்து, வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.2000 – ராகுல் காந்தி அறிவிப்பு
Rahul Gandhi Campaign: புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் இறுதிக்கட்டத்த எட்டியுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2000 மற்றும் பெண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.

ராகுல் காந்தி
புதுச்சேரி, ஏப்ரல் 6 : புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 9, 2026 அன்று நடைபெறவுள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்வதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் ஏப்ரல் 6, 2026 அன்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்தனர். டெல்லியில் இருந்து தனி விமானம் சென்னை வந்த அவர்கள் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றனர். இந்த நிலையில் புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதுச்சேரியில் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என்று வாக்குறுதிகளை அளித்தார்.
புதுச்சேரியில் பெண்களுக்கு இலவச பேருந்து
மேலும் பேசிய அவர், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதில் உறுதியாக உள்ளோம். புதுச்சேரியை மண்ணின் மைந்தர்கள் ஆள வேண்டும். துணை நிலை ஆளுநர் ஆட்சி செய்வதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை. அரசு வேலைக்கான வயது வரம்பு 40 ஆக அதிகரிக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.20 லட்சம் மருத்துவ காப்பீடு, காங்கிரஸ் கட்சி அமைந்த 6 மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றார்.
இதையும் படிக்க : துரோகக் கூட்டணி தான் என்டிஏ – மதுரையில் முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்
புதுச்சேரியில் ராகுல் காந்தி பேச்சு
#WATCH | “Everybody knows that there is 30% commission taken on all contracts. The govt here has become a collection agent…,” says LoP, Lok Sabha and Congress MP Rahul Gandhi, addressing an election rally in Lawspet, Puducherry. pic.twitter.com/psoPSpQdVL
— ANI (@ANI) April 6, 2026
மேலும் பேசிய அவர், புதுச்சேரியில் அரசு, தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் மேலும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2,000 வழங்கப்படும் என்றார். புதுச்சேரியில் ஒவ்வொரு அரசு ஒப்பந்தத்திற்கும் 30 சதவிகிதம் கமிஷன் பெறப்படுகிறது. போலி மருந்து விவகாரத்தில் அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு அருகே மதுபான கூடங்கள் தொடங்கப்படுகின்றன. கோவிலுக்கு சொந்தமான இடங்களை விற்கிறார்கள் என்று பேசினார்.
இதையும் படிக்க : விஜய்யின் மனதில் பாஜக இருக்கிறது.. அதனால் எங்கள் வேட்பாளரின் பெயரை கூறினார் – குஷ்பு பதில்
புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக, என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளும், இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
இதனால் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் 4 முனைபோட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் புதுவையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.