மார்ச் 4, 2026: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் அரசியல் களம் பரபரப்பாக தொடங்கியுள்ளது. இதில் முக்கியமாக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே இருந்து வந்த தொகுதி பங்கீடு இழுபடி முடிவுக்கு வந்துள்ளதாகவும், கூட்டணி உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, காங்கிரசுக்கு திமுக கூட்டணியில் 28 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 சட்டமன்ற தேர்தலை எடுத்துக் கொண்டால், தமிழகத்தில் அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது. இதில் பிரதான போட்டி திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே தான் நிலவி வருகிறது.
மேலும் படிக்க: மக்களே உஷார் … தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக உயரும்
திமுக காங்கிரஸ் கூட்டணி:
இந்த சூழலில் அதிமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், பாரதிய ஜனதா கட்சி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் திமுக கூட்டணியை எடுத்துக் கொண்டால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக, மக்கள் நீதி மையம், இந்திய முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் முக்கியமாக திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்து வந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக இழுபறியில் இருந்து வந்தது. அதாவது, காங்கிரஸ் தரப்பில் 35 இடங்கள் கேட்கப்பட்டதாகவும், ஆனால் திமுக தரப்பில் 25 இடங்கள் மட்டுமே வழங்கப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
28+1 இடங்கள் ஒதுக்கீடு?
இந்த சூழலில், முன்னாள் நிதி அமைச்சரான ப. சிதம்பரம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பது குறித்து கட்சி மேலிடத்திற்கு ப. சிதம்பரம் தெரிவிப்பார் என செல்வப்பெருந்தகை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: அ.தி.மு.க. தொண்டர்கள் தி.மு.க.வுக்கே வாக்களிப்பார்கள்: ஓ.பி.எஸ்
இந்த நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் உறுதியாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தரப்பில் 35 இடங்கள் கேட்கப்பட்டாலும், தற்போது திமுக தரப்பில் சர்ச்சைகள் ஏறி வந்து, கிட்டத்தட்ட 28 + 1 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் உறுதியாக தொடரும் என்றும், இன்று மாலை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரி ஷோலங்கர் சென்னை வருகை தருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விரைவில் தொகுதி பங்கீடு விவரங்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
