அதிமுக உள்கட்சி பூசல்.. சட்டப்பேரவையில் இரு குழுவாக அமர்ந்திருந்த எம்எல்ஏக்கள்..!
Aiadmk Mlas Two Groups: தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு நிகழ்வில் அதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் இரு குழுக்களாக பிரிந்து அமர்ந்துள்ளனர். அவர்கள் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு குழுவாகவும் பிரிந்துள்ளனர்.

சட்டப்பேரவையில் எதிரொலித்த அதிமுக உள்கட்சி பூசல்
தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாக பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று திங்கள்கிழமை ( மே 11- ஆம் தேதி) தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவையில் நடைபெற்றது. இதில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தார். இதில், திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்திருந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 233 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று எம்எல்ஏக்களாக பதவி ஏற்றனர். இதற்கு முன்னதாக, அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வருகை தந்திருந்தனர். அவர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும், சி.வி. சண்முகம் தலைமையில் மற்றொரு குழுவாகவும் வருகை தந்தனர்.
அதிமுகவில் இரு குழுவாக பிரிந்த எம்எல்ஏக்கள்
அத்துடன் சட்டப் பேரவையின் உள்ளே இரு குழுவை சேர்ந்த எம்எல்ஏக்களும் தனித்தனியாக அமர்ந்திருந்தனர். அதிமுகவில் தலைமை பதவிக்கு அந்த கட்சியினர் இடையே மோதல் போக்கு இருந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியில் இணைய வேண்டும் என்று சில எம்எல்ஏக்கள் போர் கொடி தூக்கியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 5 பேருடன் ஒரு குழுவாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் ஆகியோர் தலைமையில் எம்எல்ஏக்கள் ஒரு குழுவாகவும் வருகை தந்திருந்தனர். அவர்கள் சட்டப்பேரவையின் உள்ளே இரு குழுவாக பிரிந்து அமர்ந்திருந்தனர்.
தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தல்
அதிமுக தொடர்ச்சியாக 11 தேர்தல்களில் பெரும் தோல்வியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அந்த கட்சியை சேர்ந்தவர்கள் விலகி வெவ்வேறு கட்சிகளில் இணைந்து வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களான எஸ். பி. வேலுமணி, சி.வி சண்முகம் ஆகியோர் தலைமையிலான எம்எல்ஏக்கள் ஒரு குழுவாக பிரிந்ததுடன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும், அமைச்சர் பதவிகளை கேட்டு பெற வேண்டும் எனவும் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பாக எஸ் பி வேலுமணி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியை சந்தித்ததாகவும் தெரிகிறது.
தவெகவுக்கு ஆதரவாக 34 அதிமுக எம்எல்ஏக்கள்
மேலும், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பாக எஸ். பி. வேலுமணி மற்றும் சி. வி. சண்முகம் தலைமையில் சுமார் 34 எம்எல்ஏக்கள் ஆலோசனை மேற்கொண்டதுடன், தமிழக வெற்றி கழகத்துக்கான தங்களது ஆதரவு கடிதத்தை முதல்வர் விஜய்யிடம் வழங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த மோதல் போக்கை வெளிப்படுத்தும் விதமாகவே சட்டப்பேரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் 2 குழுக்களாக பிரிந்து அமர்ந்துள்ளனர்.