மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்.. குளித்தலையில் அதிர்ச்சி..
Kulithalai Crime News: கரூர் மாவட்டத்தில் குளித்தலையில், கணவன் மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டதில் மனைவியை தாக்கியுள்ளார். இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஜூலை 20, 2025) அதிகாலை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

குளித்தலை, ஜூலை 20, 2025: கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன். அதிகாலையில் நடந்த சம்பவத்தால் குளித்தலை அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ரூத். இவர் ஆக்டிங் டிரைவர் ஆக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் ஸ்ருதி (வயது 27) என்பவருக்கும் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று ஜூலை 19, 2025 அன்று, கணவன் மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறில் வாக்குவாதம் ஏற்பட்டதில் ஸ்ருதியை தாக்கியுள்ளார். இதனை அடுத்து அவரை நேற்று அதாவது ஜூலை 19, 2025 அன்று நள்ளிரவு குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனைவியை கத்தியால் குத்தி கொலை:
இதனை தொடர்ந்து ஜூலை 20, 2025 தேதியான இன்று, அதிகாலை அரசு மருத்துவமனையில் முதல் தளத்தில் குளுக்கோஸ் ஏற்றிய நிலையில் மயக்கத்தில் இருந்தவரை விஷ்ரூத் கத்தியால் மூன்று இடங்களில் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஸ்ருதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் படிக்க: மனைவி உயிரிழந்த சோகம்.. ஒரு வருடமாக மன உளைச்சலில் இருந்த முதியவர் விபரீத முடிவு!
இது குறித்து தகவல் அறிந்த குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் மற்றும் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஸ்ருதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய விஷ்ரூத்தை குளித்தலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: பயணிகளே..! பராமரிப்பு பணியால் கோவை, ஜோலார்பேட்டை ரயில்கள் ரத்து…
இதில் விஷ்ரூத் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கருப்பு பூனை படையில் டிஎஸ்பியாக வேலை பார்த்து பணி ஓய்வு பெற்ற ராமசாமி என்பவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அதிகாலையில் நடந்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.