கேஸ் சிலிண்டர் விலை முதல் இபிஎஃப்ஓ வரை.. மார்ச் மாதத்தில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!
March 2026 Changes | ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் விலை, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில், 2026 மார்ச் மாதம் முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாதிரி புகைப்படம்
ஒவ்வொரு மாதம் தொடங்கும்போதும் கேஸ் சிலிண்டர் விலை (Gas Cylinder Price), ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். 2026, பிப்ரவரி மாதம் இன்னும் ஒருசில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில், விரைவில் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. மார்ச் மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலை முதல் யுபிஐ (UPI – Unified Payment Interface) வரை சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேஸ் சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும். இதன் காரணமாக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில் 2026, பிப்ரவரி மாதத்தில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், மார்ச் மாதத்தில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : புதியதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?.. முழு விவரம் இதோ!
இபிஎஃப்ஓவில் வரவுள்ள முக்கிய மாற்றம்
மாத சம்பளம் வாங்கும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO – Employee Provident Fund Organization) அமைச்சகம் பிஎஃப் கணக்கில் பணத்தை வரவு வைக்கும். இந்த பணத்தை ஊழியர்கள், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் க்ளெய்ம் செய்வதற்கான நடைமுறை அமலில் உள்ள நிலையில், 2026 மார்ச் மாதம் முதல் அதில் மாற்றம் ஏற்பட உள்ளது. அதாவது மார்ச் மாதம் முதல் பிஎஃப் பணத்தை ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மற்றும் யுபிஐ செயலிகள் மூலம் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க : இனி 24 மணி நேரமும் ரேஷன் பொருட்களை பெறலாம்?.. விரைவில் அமலுக்கு வரும் தானிய ஏடிஎம் மையங்கள்!
யுடிஎஸ் செயலி செயல்படாது
இந்திய பொதுமக்கள் மத்தியில் ரயில் போக்குவரத்து மிகவும் பிரதானமானதாக உள்ளது. இந்த நிலையில், ரயிலில் பயணம் செய்ய பொதுமக்கள் செயலிகள் மூலம் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்து வரும் நிலையில், மார்ச் 01, 2026 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யக்கூடிய யுடிஎஸ் செயலி செயல்படாது என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. அதற்கு மாறாக ரயில் ஒன் செயலி பயன்பாட்டில் இருக்கும் என்று கூறியுள்ளது.