அதிகரிக்கும் பள்ளி கட்டணம் – பிரிட்ஜ் லோன் தீர்வாகுமா? விவரம் இதோ!
Rising School Costs: ஆண்டுதோறும் பள்ளி கட்டணங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் பெற்றோர்கள் மிகுந்த நிதி நெருக்கடிக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பள்ளிக் கட்டணத்தை சமாளிக்கும் வகையில் பலர் பிரிட்ஜ் லோன் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பிரிட்ஜ் லோன் பெற்றோர்களுக்கு தீர்வாக அமையுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதிய கல்வியாண்டு தொடங்கியுள்ள இந்த நேரத்தில், பள்ளி கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ளதால் பல பெற்றோர்கள் நிதிச்சுமையை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக டெல்லி(Delhi), பெங்களூரு, ஹைதராபாத்(Hyderabad), சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பல பெற்றோர்கள் இந்த வகை நிதிச்சுமையை சந்தித்து வருகின்றனர். கடந்த மே, 2025 அன்று லோக்கல் சர்க்கிள்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் நாடு முழுவதும் 120 மாவட்டங்களை சேர்ந்த 18,000 பெற்றோர்கள் பங்கேற்றனர். இதில் 44 சதவிகித பெற்றோர்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் 50-80 சதவிகிதம் வரை பள்ளி கட்டண உயர்வை சந்தித்துள்ளதாக தெரிவித்தனர். சில பள்ளிகள் ஆண்டுக்கு 10 முதல் 50 சதவிகிதிம் வரை கட்டணங்களை உயர்த்தியுள்ள நிலையில், பெற்றோர் ‘பிரிட்ஜ் லோன்’ (bridge loan) எனப்படும் கடன் உதவியை நாடத் தொடங்கியுள்ளனர். இது உண்மையில் பள்ளி கட்டண உயர்வுக்கு தீர்வாக அமையுமா அல்லது சிக்கலை ஏற்படுத்துமா என்பது குறித்து மணி கண்ட்ரோலில் வெளியான கட்டுரையின் அடிப்படையில் தெரிந்துகொள்ளலாம்.
பள்ளி கட்டண உயர்வால் தவிக்கும் குடும்பங்கள்
டெல்லியை சேர்ந்த சுமீத் கோதாரி என்பவர், தனது மகன் ஆரவ் இந்த ஆண்டு மூன்றாம் வகுப்புக்கு செல்லவிருப்பதாகவும் ஆனால் பள்ளி கட்டண உயர்வு தனக்கு பெரும் சுமையாக உள்ளது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் வருடக்கட்டணமாக தற்போது ரூ.1 லட்சத்திற்கு மேல் செலவாகிறது. இதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். இதனால் தனது மகன் ஆரவ்வின் எதிர்கால திட்டங்களுக்கு சேமிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். அவருக்கு ஆண்டுக்கு 6 முதல் 8 சதவிகிதம் தான் சம்பள உயர்வு கிடைக்கிறது எனவும் தற்போது கடன் வாங்கும் முயற்சியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
சில தனியார் பள்ளிகள், தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களால் பள்ளி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் சில நிதி நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுக்கு கல்விக் கடன் பெற்றுத் தருகின்றன. இந்த கடன் நேரடியாக பள்ளிக்கு செலுத்தப்படும். பெற்றோர்கள் இந்த தொகைக்கு மாதத் தவணை செலுத்த வேண்டியிருக்கும். பொதுவாக, இந்த கடன் திட்டம் பள்ளிக் கட்டணங்கள், புத்தகங்கள், லேபரட்டரி, ஹாஸ்டல் உள்ளிட்ட செலவுகளை உள்ளடக்கியதாக இருக்கும். ஆனால், பள்ளிகளின் மறைமுக கட்டணங்கள், டியூசன் போன்ற செலவுகளுக்கு உள்ளடக்கியதாக இருக்காது.
வட்டி விவரங்கள்
சில வங்கிகள் ஆண்டுக்கு 12 சதவிகித ஆண்டுவட்டியுடன் கல்விக் கடன் வழங்குகின்றன. IDFC First Bank, Eduvanz, GrayQuest போன்றவை நோ காஸ்ட் இஎம்ஐ (No Cast EMI) வழங்குகின்றன. உதாரணமாக, வருட கட்டணம் ரூ.2.4 லட்சமாக இருந்தால், பெற்றோர் மாதம் ரூ.20,000 தவணை செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், சில நிறுவனங்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பிருக்கிறது.
கவனமாக இருப்பது அவசியம்
பிரிட்ஜ் லோன் வசதியை எடுத்தால் தவறாமல் மாதம் சரியாக தவணை செலுத்த வேண்டும். சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால், பள்ளி மாணவனின் மதிப்பெண் பட்டியல் நமக்கு கிடைக்காது போன்ற நிபந்தனைகள் இருக்கலாம். மேலும் தாமதமாக மாதத் தவணை செலுத்தினால் அவை கிரெடிட் ஸ்கோரை பாதிக்கக்கூடும்.