இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டம் அமலுக்கு வரவுள்ள நிலையில், பணியாளர்கள் எடுக்காமல் இருக்கும் விடுப்பு (Earned Leave) மற்றும் அந்த விடுப்பை பணமாக மாற்றுவது (Encashment) தொடர்பாக முக்கியமான மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொழிலாளர் சட்டம் 2020 சட்டத்தின் கீழ், விடுப்பு விதிமுறைகள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக மாற்றப்படவுள்ளது. புதிய விதிகளின்படி, பணியாளர்கள் 20 நாட்கள் வேலை செய்தால் 1 நாள் விடுமுறை பெறுவார்கள், மேலும் அதிகபட்சமாக 30 நாட்கள் வரை விடுமுறை எடுக்காமல் அதனை சேமித்து வைத்திருக்கலாம்.
இந்த வரம்பை கடந்த விடுமுறையை பணமாக மாற்றிக் கொள்ளும் உரிமையும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது. குறிப்பாக, ஆண்டின் இறுதியில் 30 நாட்களுக்கு மேல் எடுக்கப்படாமல் இருக்கும் விடுமுறையை அன்றைய நாளுக்கான ஊதியமா பெறலாம் என்பது தான் இந்த விதி . இது பணியாளர்களுக்கு பெரிய அளவில் நன்மை பயக்கும் திட்டமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : வேலையில் இருந்து விலக போறீங்களா? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க
முன்பு, ஒவ்வொரு மாநிலத்திலும் விடுமுறைக்கான விதிகளில் தனித்தனி சட்டங்கள் இருந்ததால் அதில் குழப்பங்கள் இருந்தன. சில இடங்களில் 45 முதல் 60 நாட்கள் வரை சேமிக்க அனுமதி இருந்தது. ஆனால் புதிய சட்டம் இந்த குழப்பத்தை நீக்கி, தெளிவான மற்றும் ஒரே விதிமுறையை கொண்டு வந்துள்ளது. இந்த நன்மைகள் நிறுவன பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் நிரந்தர கால பணியாளர்கள் ஆகியோருக்கு பொருந்தும்.
அதே நேரம் மேனேஜ்மென்ட் அல்லது நிர்வாகப் பொறுப்பில் உள்ள உயர்ந்த சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு இது பொருந்தாது. மேலும், ஒரு பணியாளர் கேட்ட விடுப்பை நிறுவனம் மறுத்தால், அந்த விடுப்பை எந்த வரம்பும் இல்லாமல் சேமித்து வைத்து பின்னர் பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்ற முக்கிய பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : ஆதார் கார்டு – உங்கள் பெயர், பிறந்த தேதியை எத்தனை முறை மாற்றலாம்? மத்திய அரசின் புதிய நிபந்தனைகள்
இந்நிலையில், இந்த புதிய விதிகள் இன்னும் முழுமையாக அமலுக்கு வர வில்லை. மாநில அரசுகள் தனித்தனியாக இதற்கான விதிமுறைகளை அறிவித்த பிறகே நாடு முழுவதும் நடைமுறைக்கு வரும். இருப்பினும், இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டால், பணியாளர்களுக்கு விடுமுறைகள் தொடர்பாக அதிக உரிமைகள், தெளிவான விதிமுறைகள் கிடைக்கும். மேலும் நாடு முழுவதும் நியாயமான பணி சூழல் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனால் ஆண்டு முழுவதும் எடுக்கப்படாமல் இருக்கும் விடுப்புகள் குறித்து பணியாளர்களுக்கு தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை விடுமுறை தொடர்பான சிக்கல் இருந்தால் பணியாளர்களால் கேள்வி எழுப்ப முடியும்.