ஈரான் – அமெரிக்கா போர் பதற்றம்: ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!!
வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் வரை, ஈரானில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளைத் தூதரகம் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, ஈரானில் தற்போது உள்நாட்டு அரசு எதிர்ப்புப் போராட்டங்களும் வெடித்துள்ளதால், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் போராட்டக் களங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவுறுத்தல் ஈரானில் தங்கியுள்ள மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவருக்கும் பொருந்தும்.
ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான அரசியல் உறவில் ஏற்பட்டுள்ள கடும் விரிசல் காரணமாக, மத்திய கிழக்கு ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்நிலையில், ஈரானில் வசிக்கும் இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்கு மிக முக்கியமான பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்:
— India in Iran (@India_in_Iran) February 23, 2026
ஈரான் மீது அமெரிக்கா விரைவில் தாக்குதல்களை நடத்தக்கூடும் என்ற உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், இந்திய தூதரகம் தனது குடிமக்களை உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. வணிக ரீதியான விமானங்கள் அல்லது கிடைக்கக்கூடிய இதர போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டும். இந்த அறிவுறுத்தல் ஈரானில் தங்கியுள்ள மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவருக்கும் பொருந்தும்.
பாதுகாப்பு வழிகாட்டுதல்கள்:
இந்தியர்கள் வெளியேறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் வரை, ஈரானில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளைத் தூதரகம் பட்டியலிட்டுள்ளது. அதன்படி, ஈரானில் தற்போது உள்நாட்டு அரசு எதிர்ப்புப் போராட்டங்களும் வெடித்துள்ளதால், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் போராட்டக் களங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பாஸ்போர்ட் (Passport) மற்றும் இதர அடையாள ஆவணங்களை எப்போதும் கைவசம் வைத்திருக்க வேண்டும். இந்தியத் தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதோடு, உள்ளூர் ஊடகச் செய்திகளை உடனுக்குடன் கவனித்து வர வேண்டும்.
அவசர உதவிக்கான எண்கள்:
பாதிப்புக்குள்ளாகும் இந்தியர்களுக்கு உதவ இந்தியத் தூதரகம் 24 மணிநேர அவசர உதவி எண்களையும், மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டுள்ளது. அவசர எண்கள்: +989128109115, +989128109109, +989128109102, +989932179359. மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in ஆகியவற்றின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
ஈரானில் தற்போதைய சூழல்:
ஈரானில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் 40வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, தற்போது அங்கு மீண்டும் தீவிர அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஒருபுறம் உள்நாட்டுக் குழப்பம், மறுபுறம் அமெரிக்காவின் தாக்குதல் அச்சம் என ஈரான் இக்கட்டான சூழலில் உள்ளது. செர்பியா, சுவீடன் போன்ற நாடுகளும் தங்களது குடிமக்களை ஈரானிலிருந்து வெளியேறுமாறு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.