சாட்ஜிபிடியிடம் உங்கள் பெர்சனல் தகவல்களை பகிர்ந்துகொள்கிறீர்களா? எச்சரிக்கும் சாம் ஆல்ட்மேன்
OpenAI CEO Issues Warning : தற்போது பலரும் அனைத்து தேவைகளுக்கும் சாட்ஜிபிடியிடம் அறிவுரை கேட்ட பிறகே தங்கள் பணிகளை துவங்குகிறார்கள். இந்த நிலையில் சாட்ஜிபிடி போன்ற ஏஐ டூல்களிடம் தங்களது தனிப்பட்ட தகவல்களை பகிர்ந்துகொள்வது நல்லதல்ல என சாம் ஆல்ட்மேன் எச்சரிக்கவிடுத்துள்ளார். அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.

ஏஐ டூல்களின் (AI Tools) வருகைக்கு பிறகு, காய்கறிகள் வாங்குவதில் இருந்து மருத்துவ பரிசோதனைகள் வரை அதனிடம் அறிவுரை கேட்ட பிறகு தான் முடிவெடுக்கிறார்கள். ஒருவர் தர்பூசனி பழம் வாங்குவதற்கு சாட்ஜிபிடியின் (Chatgpt) உதவி கேட்டு சரியான பழத்தை தேர்ந்தெடுத்ததாக வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இணையத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பகிரும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என OpenAI தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மன் தெரிவித்திருக்கிறார். குறிப்பாக, சாட்ஜிபிடி (Chatgpt) போன்ற ஏஐ டூல்களுடன் உங்கள் பிரச்னைகள் பற்றி பேசும்போது உங்கள் தனியுரிமை பாதுகாப்பு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஏஐயுடன் பேசும் போது சட்ட பாதுகாப்பு கிடையாதா?
குடும்ப பிரச்சனைகள், காதல் விவகாரங்கள், தொழில் சார்ந்த சிக்கல்கள் போன்றவற்றை இன்றைய இளைஞர்கள் சாட்ஜிபிடி போன்ற ஏஐ டூல்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் ஒரு மருத்துவர், வக்கீல், மனநல நிபுணருடன் பேசும் போது உள்ள சட்டப் பாதுகாப்பு, ஏஐ உடன் மேற்கொள்லும் உரையாடல்களுக்கு கிடையாது. அதாவது, நீங்கள் சாட்ஜிபிடி உடன் பகிரும் தகவல்கள் ஒரு வழக்கில் சட்டத்தினால் கோரப்பட்டால் வழங்க வேண்டிய நிலை உருவாகலாம் என்றே ஆல்ட்மன் எச்சரிக்கிறார்.
இதையும் படிக்க : WhoFi: வைஃபை மூலம் நபர்களை அடையாளம் காணுதல்.. புதிய தொழில்நுட்பத்தால் பாதுகாப்பா..? சிக்கல்களா?
சாம் ஆல்ட்மன் என்ன சொல்கிறார்?
Theo Von என்ற பாட்காஸ்டில் பேசிய சாம் ஆல்ட்மன், “மிகவும் தனிப்பட்ட விஷயங்களை சாட்ஜிபிடி உடன் பகிர்வது தற்போது பொதுவான பழக்கமாகிவிட்டது. மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இதை தங்கள் நண்பராகவும், வாழ்க்கை வழிகாட்டியாகவும், மனநல ஆலோசகராகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதற்கு சட்ட ரீதியாக எவ்வித பாதுகாப்பும் இல்லை. ஒரு வழக்கு நடந்தால், ஏஐ உடன் நீங்கள் மேற்கொண்ட உரையாடல்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய கட்டாயம் உருவாகலாம். இது மிக மோசமான நிலை,” என்று அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
இதையும் படிக்க : உங்கள் பெயரில் போலி Instagram கணக்கு தொடங்கப்படுகிறதா?.. அப்போ இத பண்ணுங்க!
சட்ட நடவடிக்கைகள் அவசியம்
அதனால்தான், ஏஐ உடன் பகிரும் தகவல்களுக்கு, மனித ஆலோசகரிடம் பேசும் போது நமக்கு கிடைக்கும் பாதுகாப்பு தேவை என்றும், அதற்கான சட்டத் திட்டங்களை உருவாக்கும் அவசியம் அதிகமாகி வருவதாகவும் அவர் கூறினார். அதோடு, பல அரசியல் அறிஞர்கள் இதனை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் சாம் ஆல்ட்மன் தெரிவித்தார். “நாம் விரைவில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது,” என்றும் அவர் தெரிவித்தார்.