Part Time Job Scam : அதிகரிக்கும் பகுதி நேர வேலை மோசடி.. பாதுகாப்பாக இருக்க சில டிப்ஸ்!
Part-Time Job Scams | தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல விஷயங்கள் மிக சுலபமாக மாறியிருந்தாலும், சில விஷயங்கள் சிக்கல்களை உருவாக்குகின்றன. அந்த வகையில், ஆன்லைன் செயலிகள் மூலம் வேலை தேடும் வாய்ப்பு உள்ள நிலையில், அதன் மூலம் மோசடிகள் நடைபெறுவதும் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில், அவற்றில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
தற்போதைய காலக்கட்டத்தில் மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கு பொருளாதாரம் (Economy) முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள பலரும் வேலை அல்லாமல் கூடுதலாக பகுதி நேர வேலைகளை செய்கின்றனர். வீட்டை கவனித்துக்கொள்ளும் பெண்களும் பகுதி நேர வேலை செய்து வருமானம் ஈட்ட ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது வேலை தேட ஆன்லைன் செயலிகள் மற்றும் இணையதளங்கள் உள்ள நிலையில், அதன் மூலமும் பகுதி நேர வேலை தேடுகின்றனர். இந்த நிலையில், இவ்வாறு பகுதி நேர வேலை தேடும் நபர்கள் அவ்வபோது மோசடிகளில் சிக்கிக்கொள்வது வழக்கமாக உள்ளது. எனவே, பகுதி நேர வேலை மோசடிகளில் (Part Time Job Scam) சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக வேலை தேடுவதற்கான சில வழிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பகுதி நேர வேலைகளில் சிக்கிக்கொள்ளும் பொதுமக்கள்
பல நிறுவனங்கள் பகுதி நேர வேலை வழங்கினாலும், சில மோசடி கும்பல்கள் பகுதி நேர வேலை என்ற பெயரில் மோசடிகளை செய்து வருகிறது. குறிப்பாக, வேலை வாங்கிக்கொண்டு அதற்கான பணம் தராமல் ஏமாற்றுவது, வேலை வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும் என கூறுவது என இவ்வாறு பல விதமாக பகுதி நேர வேலை என்ற மோசடியில் பொதுமக்கள் சிக்கிக்கொள்கின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் நிதி இழப்பு, பொருளாதார சிக்கல் மற்றும் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
பகுதி நேர மோடி – சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
நிறுவனம் குறித்து சோதனை செய்யுங்கள்
உங்களுக்கு ஏதேனும் நிறுவனத்திடம் இருந்து வேலை வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறினால், அந்த நிறுவனம் குறித்து சோதனை செய்யுங்கள். உண்மையாகவே அப்படி ஒரு நிறுவனம் உள்ளதா, அந்த நிறுவனம் எங்கு உள்ளது, அவர்ளுக்கென இணையதளம் உள்ளதா ஆகியவற்றை சோதனை செய்யுங்கள். ஒருவேளை அந்த நிறுவனத்திற்கான இணையதளம் இருப்பின் இதற்கு முன்பு அங்கு வேலை செய்த பணியாளர்கள் அந்த நிறுவனம் குறித்து என்ன கூறியுள்ளார்கள் என்பதனை தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஆசையை தூண்டும் வகையில் இருக்கும் வேலைகள்
மோசடி கும்பல்கள் பொதுமக்களின் ஆசையை தூண்டி, அவர்களை வலையில் விழ வைப்பதற்காக சில வேலைகளை செய்வர். குறிப்பாக குறைவான வேலை அதிக சம்பளம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்குவார்கள். இத்தகைய வேலை வாய்ப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
கட்டணம் செலுத்த கூறும் வேலை வாய்ப்புகள்
பகுதி நேர வேலை மோசடிகளில் முதன்மையானது தான் இந்த கட்டணம் செலுத்தும் முறை. சில மோசடி கும்பல்கள் பகுதி நேர வேலை வேண்டும் என்றால் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறுவார்கள். அதனை நம்பி பொதுமக்கள் கட்டணம் செலுத்தும் பட்சத்தில் பணத்தை எடுத்துக்கொண்டு காணாமல் போய்விடுவார்கள். பொதுவாக எந்த ஒரு நிறுவனமும் தங்களது ஊழியர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்காது. எனவே இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்.