Covid Updates: கொரோனாவால் விழுப்புரம் இளைஞர் பலி.. சுகாதாரத்துறை விளக்கம்!

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் கொரோனா பாதித்த 35 வயது நபர் உயிரிழந்தார். இறந்த தியாகராஜனுக்கு நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்ததாகவும், கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இதய செயலிழப்பால் இறந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Covid Updates: கொரோனாவால் விழுப்புரம் இளைஞர் பலி.. சுகாதாரத்துறை விளக்கம்!

உயிரிழந்த தியாகராஜன்

Updated On: 

06 Jun 2025 19:29 PM

விழுப்புரம், ஜூன் 6: விழுப்புரம் (Villupuram) மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் கொரோனா (Covid 19) பாதித்த ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2025 ஜூன் 6ஆம் தேதி 35 வயது உடைய நபர் ஒருவர் கொரோனா தொற்று உறுதியான பத்து நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். இறந்த நபர் திண்டிவனம் அருகே உள்ள பிரப்பேரி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் கட்டுமான ஒப்பந்ததாரராக பணியாற்றி வந்த தியாகராஜன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்த போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. கடுமையான காய்ச்சல் மற்றும் கொரோனா தொற்று தொடர்பான அறிகுறிகள் இருந்ததால் அவர் ஒரு வாரத்திற்கு முன்பு விடுமுறை எடுத்துவிட்டு திண்டிவனத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.

இணை நோய்கள் காரணம் என விளக்கம்

முதலில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தியாகராஜனின் உடல்நிலை 2025 ஜூன் 6ஆம் தேதி அதிகாலையில் மோசம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து அவர் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். மருத்துவர்கள் தீவிர முயற்சிகள் எடுத்த நிலையில் இதய செயலிழப்பு காரணமாக தியாகராஜன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்கனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்,இதய பிரச்சினைகள் இருந்ததாகவும் மற்றும் காச நோய்க்கான மருந்துகளை எடுத்து வந்தார் எனவும் ஹைதராபாத்தில் இருந்து திரும்பிய பிறகு உடல்நிலை மோசமாக மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவுரை

The New Indian express தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளின்படி, விழுப்புரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் அளித்துள்ள தகவலின்படி,  “ஹைதராபாத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு 2025 ஜூன் 6ஆம் தேதி இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட பரிசோதனையில் தியாகராஜனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.  ஆனால் அவருக்கு இருந்த இணை நோய்களால் எதிர்பாராத வகையில் உயிர் இழந்தார் அவருடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தியாகராஜன் கிராமமான பிரப்பேரி கிராமத்தில் வசிக்கும் மக்கள் கோவிட்-19 வழிகாட்டுதலை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ்நாடு அரசு கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக களமிறங்கி உள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்ட நிலையில், கர்ப்பிணிகள் முக கவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் கொரோனோ அறிகுறிகள் இருந்தால் மகப்பேறு காலத்திற்கு முன்பாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் எனவும், கூட்ட நெரிசல் உள்ள இடங்களை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.