காதலனுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம்? மன உளைச்சலில் இளம் பெண் விபரீத முடிவு.. சிக்கியது உருக்கமான கடிதம்!
Chennai Crime: சென்னையில் காதலன் பேச மறுத்ததுடன், வெறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவெடுத்ததால் மன உளைச்சலில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீசார் அந்த இளைஞர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

சென்னையில் இளம் பெண் தற்கொலை
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கண்ணா. இவர், சென்னை சூளைமேடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் திரிவேணி. இவரும், தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த யஸ்வந்த் என்ற இளைஞரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக திரிவேணியிடம், யஸ்வந்த் பேசுவதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, திரிவேணி பலமுறை யஸ்வந்த்திடம் கேட்டும் அவர் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, யஸ்வந்தின் நண்பர்களிடம் திரிவேணி விசாரித்ததாக தெரிகிறது. இதில், யஸ்வந்த் அவரது மாமா மகளுடன் பழகி வருவதும், அவரை காதலிப்பதும் தெரிய வந்ததாம். இதனால், அதிர்ச்சி அடைந்த திரிவேணி தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். அதன்படி, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தொங்கினார்.
தீவிர சிகிச்சையில் உயிரிழந்த இளம் பெண்
இதை பார்த்து, அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் திரிவேணியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். அதன்படி, அவர்கள் திரிவேணியே அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த சிறிது நேரத்தில் திரிவேணி பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
மேலும் படிக்க: இன்க்யூபேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு.. பிறந்த 6 நாள் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்.. மருத்துவமனையின் அலட்சியம் தான் காரணமா?
திரிவேணி எழுதிய கடிதம் சிக்கியது
இந்த சம்பவம் தொடர்பாக திரிவேணியின் தந்தை வெங்கண்ணா அளித்த புகாரின் பேரில், சென்னை வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், திரிவேணி தற்கொலை செய்து கொண்ட அறையில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், திரிவேணி கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில், அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். நான் காதலித்து வந்த யஸ்வந்த் என்ற இளைஞர் என்னிடம் பேசாமல் இருந்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரை என்னால் மறக்கவும் முடியவில்லை. யஸ்வந்த் என்னை ஏமாற்றி விட்டு அவரது மாமா பெண்ணை திருமணம் செய்ய உள்ளார்.
காதலன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு
இதனால், மிகுந்த மன உளைச்சலில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளேன். என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே, நான் தற்கொலை செய்கிறேன் என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த யஸ்வந்த் என்ற இளைஞர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலன் தன்னை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த மன உளைச்சலில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணத்தை தடுக்க
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)
மேலும் படிக்க: விளாத்திக்குளம் மாணவி பாலியல் கொலை… குற்றவாளிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல்.. 10 நாள்களுக்கு பிறகு உடலை வாங்கிய பெற்றோர்!