மே 9, 2026: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள சூழலில், தமிழகத்தில் இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 118 இடங்கள் தேவை. ஏற்கனவே இது தொடர்பாக மூன்று முறை தமிழக ஆளுநரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் சந்தித்து, ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரியுள்ளார். ஆனால், தற்போது வரை பெரும்பான்மை இல்லாததன் காரணமாக ஆட்சி அமைக்க அழைக்க முடியாது என ஆளுநர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தவெகவிற்கு ஆதரவாக இடதுசாரிகள்:
இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்திற்கு தற்போது வரை 116 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் இரண்டு உறுப்பினர்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்தது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமல்லாமல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்து கூட்டணியில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு 112 ஆக உயர்ந்தது.
மேலும் படிக்க: உச்சக்கட்ட பரபரப்பில் அரசியல் களம்.. அ.ம.மு.க எம்.எல்.ஏ காமராஜ் கையெழுத்திடும் வீடியோவை வெளியிட்ட த.வெ.க..
அதனைத் தொடர்ந்து, இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தெரிவித்திருந்தன. எனவே, தற்போது வரை தமிழக வெற்றி கழகத்திற்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இரண்டு எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில், இதை தீர்மானிக்கப் போகும் முக்கிய காரணியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது.
திருமாவளவன் எடுக்கப்போகும் முடிவு என்ன?
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்றைய தினம் நல்வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு; இனி நம்ம காலம்தான்” என குறிப்பிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தரும் என கூறப்பட்டுள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலினை திருமாவளவன் திடீரென நேரில் சந்தித்தார். மேலும், கூட்டணி அமைப்பது தொடர்பாக அல்லது ஆதரவு தருவது தொடர்பாக இன்று காலை அறிவிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
எனவே, திருமாவளவன் அறிவிக்கப் போகும் அந்த முடிவில்தான் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்குமா அல்லது அமைக்காதா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.