இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதையாத்திரை சென்ற 3 பெண் பக்தர்கள் – கார் மோதி பலி
Car Accident: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதையாத்திரை சென்ற 3 பெண் பக்தர்கள் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

கார் மோதி 3 பெண் பக்தர்கள் பலி
தூத்துக்குடி, டிசம்பர் 25: தூத்துக்குடி (Thoothukudi) மாவட்டத்தில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு பாதையாத்திரை சென்ற 3 பெண் பக்தர்கள் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலைப் போல, தூத்துக்குடி மாவட்டத்திலும் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இது அம்மாவட்ட மக்களிடையே சக்திவாய்ந்த அம்மனாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு பக்தர்கள் பாதையாத்திரை சென்று வழிபாடு செய்வது முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இதற்காக பக்தர்கள் விரதம் இருந்து மாலை அணிவித்து பாதையாத்திரை செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.
சாலை விபத்தில் 3 பெண் பக்தர்கள் பலி
தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபட்டிணத்தில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு டிசம்பர் 24, 2025 மாலை திருச்செந்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாதையாத்திரை சென்றனர். இந்த நிலையில் டிசம்பர் 25, 2025 அன்று மாலை குறுக்குச்சாலை பகுதியில் நடந்து சென்ற 3 பெண் பக்தர்கள் மீது கார் மோதிய விபத்தில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். , பின்னால் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது மோதியது.
இதையும் படிக்க : பிரபல அரசு மருத்துவமனை வளாகத்தில் 3 அடி உயர கஞ்சா செடி…போலீசார் நடவடிக்கை!
இந்த கோர விபத்தில், வீரபாண்டியபட்டிணம் செந்தில் வீதி தெருவை சேர்ந்த ராமமூர்த்தி மனைவி சுந்தரராணி, திருச்செந்தூர் கரம்பன்விளையைச் சேர்ந்த சுந்தரம் மனைவி கஸ்தூரி (55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த வீரபாண்டியபட்டிணம் செந்தில் வீதி தெருவை சேர்ந்த வடிவேல் மனைவி இசக்கி அம்மாள் (55) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தொடரும் சாலை விபத்துக்களால் பொதுமக்கள் கவலை
இந்த விபத்து குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தஞ்சாவூரைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ராம்பிரசாத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் ஓட்டுநர் ராம் பிரசாத் மது அருந்தியிருந்தாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிக்க : கட்டுப்பாட்டை இழந்த கார்…அரசுப் பேருந்து மீது மோதல்…பறிபோன மூன்று உயிர்கள்!
தமிழ்நாட்டில் சாலை விபத்துகளினால் மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்திருப்பது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக அரசு பேருந்துகள் சமீபகாலமாக விபத்துகளை சந்தித்து வருகின்றன. சமீபத்தில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்பை தாண்டி எதிர் திசையில் திருச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த 2 கார்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தனர். இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.