தென்காசி-தூத்துக்குடியைச் சேர்ந்தவர்களை கடத்தி சென்ற தீவிரவாதிகள்…பரபரப்பு பின்னணி!
Terrorists Abduct 5 People From Tamil Nadu: மாலி நாட்டில் தென்காசி மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 5 பேரை துப்பாக்கி முனையில் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். இது தொடர்பாக அந்த நபர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 6- ஆம் தேதி மேற்கு மாலியில் உள்ள கோப்ரி அருகே செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் ஆயுத கும்பல் நுழைந்தது. அப்போது, அங்கு பணிபுரிந்து வந்த 5 தமிழர்களை கடத்திச் சென்றது. இதை தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மற்ற இந்தியர்கள் பமாகோவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், ஆயுதக் குழுக்கள் கடத்தி சென்ற 5 தமிழர்களும் தங்களை காப்பாற்ற கோரி வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில், தென்காசி மாவட்டம், கடையநல்லூரை சேர்ந்த இசக்கி ராஜா, தளபதி சுரேஷ், தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி அருகே உள்ள கொடியங்குளத்தைச் சேர்ந்த பொன்னுதுரை, பேச்சி முத்து, புதியவன் ஆகியோர் தங்களை ஆயுத குழுக்கள் கடத்திச் சென்று 50 நாட்கள் ஆகிறது. தற்போது வரை தங்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றதாக தெரியவில்லை.
மத்திய – மாநில அரசுகளுக்கு கோரிக்கை
இதனால், ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள நாங்களும், எங்களின் நிலையால் எங்களின் குடும்பத்தினரும் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர். எனவே, தங்களை உடனடியாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளனர். இது தொடர்பாக, மாலியில் பணி புரிந்து விட்டு அண்மையில் தமிழகம் திரும்பிய ஜோசப் என்பவர் கூறுகையில், நான் மாலியில் உள்ள கோப்ரியில் சர்வேயராக பணிபுரிந்து வந்தேன். கடந்த ஆகஸ்ட் மாதம் தான் ஊர் திரும்பியிருந்தேன்.
மேலும் படிக்க: காலாவதியான வெளிநாட்டு உணவு பொருள்கள் விற்பனை…7 பேரை தட்டி தூக்கிய போலீசார்!




மாலியில் இருந்து திரும்பியவர் கூறியது
தற்போது, எனது மாமா மாலியில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 5 தமிழர்களை ஆயுத குழுக்கள் கடத்திச் சென்றது குறித்து எனது மாமா மோகன் ராஜ் என்பவர் எனக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இந்தச் சம்பவம் குறித்து கடத்திச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தெரியும் என்று நினைத்திருந்தேன். ஆனால், சில நாட்களாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வந்ததை பார்த்து கடத்திச் செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இந்த சம்பவம் தெரியாது உணர்ந்தேன் என்று தெரிவித்தார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர் கூறிய பரபரப்பு தகவல்
இது தொடர்பாக, மாலியில் உள்ள மோகன்ராஜ் கூறுகையில், கோப்பி என்ற கிராமத்தில் 18 தமிழர்கள் பணிபுரிந்து வந்தோம். சம்பவத்தன்று இரவு இரு சக்கர வாகனத்தில் துப்பாக்கியுடன் வந்த சிலர் இசக்கி ராஜா உள்ளிட்ட ஐந்து பேரை துப்பாக்கி முனையில் பிடித்து சென்றனர். இந்த சம்பவத்தை பார்த்த நான் உள்ளிட்டோர் வீட்டுக்கு பின்புறம் உள்ள வேலி வழியாக தப்பி சென்று விட்டோம் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: சாலையில் அறுவை சிகிச்சை செய்து உயிர் காப்பாற்றப்பட்ட நபர் பலி.. சோக சம்பவம்!