AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

புயல் வலுவிழந்தாலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடரும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன தகவல்..

Tamil Nadu Rain Alert: பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பதிவில், “புயல் வலுவிழந்தாலும் மேகக் கூட்டங்கள் அதே பகுதியில் இருப்பதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. இந்த மழை மேகங்கள் தொடர்ந்து இருக்கும். டிட்வா புயலின் காரணமாக சென்னைக்கு கிடைக்க வேண்டிய மழை அடுத்த இரண்டு நாட்களில் பூர்த்தி அடையும் என தெரிவித்துள்ளார்.

புயல் வலுவிழந்தாலும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடரும்.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Dec 2025 13:05 PM IST

வானிலை நிலவரம், டிசம்பர் 1, 2025: வங்கக் கடலில் உருவான டிட்வா புயலின் காரணமாக, கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பதிவாகி வருகிறது. இந்த புயல் இலங்கையிலிருந்து டெல்டா மாவட்டங்களை நோக்கி வந்த நிலையில், டெல்டா மாவட்டங்களில் அதிக கனமழை கொட்டியது. குறிப்பாக நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் போன்ற இடங்களில் எதிர்பார்த்ததை விட அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு பல ஏக்கர் பயிர்கள் கடுமையாக சேதம் அடைந்துள்ளன. அறுவடைக்கு வைத்திருந்த பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், டெல்டா மாவட்டங்களின் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வலுவிழந்த டிட்வா புயல்:

இந்த சூழலில், புயல் மெல்ல மெல்ல வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று அதாவது நவம்பர் 30, 2025 அன்று வடக்கடலோர மாவட்டங்களை நோக்கி வந்தது. ஆனால் நேற்றைய தினம் இந்த புயல் தீவிரமாக இல்லாததன் காரணமாக எதிர்பார்த்ததை விட குறைவான அளவு மழையே பதிவானது. குறிப்பாக வடக்கடலோரதமிழக மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது மட்டுமே கனமழை இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று மாலை இந்த புயல் வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.

மேலும் படிக்க: வலுவிழந்தது ‘தித்வா’ புயல்: சென்னை, திருவள்ளூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை:

தொடர்ந்து இந்த அமைப்பு வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது. இருப்பினும் புயல் சூழ்ந்து மழை மேகங்கள் இருப்பதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த சில மணி நேரங்களும் தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டிட்வா புயல் மூலம் கிடைக்க வேண்டிய மழை கிடைக்கும் – பிரதீப் ஜான்:


இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பதிவில்,
“புயல் வலுவிழந்தாலும் மேகக் கூட்டங்கள் அதே பகுதியில் இருப்பதால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. இந்த மழை மேகங்கள் தொடர்ந்து இருக்கும். டிட்வா புயலின் காரணமாக சென்னைக்கு கிடைக்க வேண்டிய மழை அடுத்த இரண்டு நாட்களில் பூர்த்தி அடையும்.

சென்னையில் மழை அதிகரிக்கும்:


சென்னை எண்ணூரில் நேற்று 51 மில்லிமீட்டரும் இன்று 49 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் கிட்டத்தட்ட டிட்வா புயலின் காரணமாக 100 மில்லிமீட்டர் மழையைத் தாண்டிய பகுதி எண்ணூராக உள்ளது. தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழையின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. மிதமான மழை தொடர்ந்தாலும், வரக்கூடிய நேரங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது” என தெரிவித்துள்ளார்.

Follow Us