தைப்பூச திருவிழா…பொது மக்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ஏற்பாடு…நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
Thaipusam Special Buses: தைப்பூசம் மற்றும் வார இறுதி நாள்களையொட்டி, சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகள் நாளை வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்பட உள்ளன.

தைப்பூசத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகத்தில் உள்ள கோவில்களில் வருகிற பிப்ரவரி 1- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அதே நேரத்தில், வார விடுமுறை நாட்களும் சேர்ந்து வருவதால் ஏராளமான பொதுமக்கள் வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். இதனால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 1,205 சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நாளை ஜனவரி 30- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்குகிறது. இதில், சென்னை கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, கும்பகோணம், நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு ஆகிய இடங்களுக்கு நாளை ( வெள்ளிக்கிழமை) 360 அரசுப் பேருந்துகளும், நாளை மறுநாள் ( சனிக்கிழமை) 485 அரசுப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
இதே போல, சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து நாகப்பட்டினம், திருவண்ணாமலை, ஓசூர், வேளாங்கண்ணி, பெங்களூர் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) சுமார் 60 அரசுப் பேருந்துகளும், நாளை மறுநாள் ( சனிக்கிழமை) 60 அரசுப் பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. மேலும், திருப்பூர், ஈரோடு, பெங்களூர், மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 200 அரசு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இதே போல, சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து நாளை ( வெள்ளிக்கிழமை) 20 அரசுப் பேருந்துகளும், நாளை மறுநாள் ( சனிக்கிழமை) 20 அரசுப் பேருந்துகளும் என மொத்தம் 1,205 அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: இஸ்லாமியர்களுக்கு வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள் – தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு
சொந்த ஊர்களில் இருந்து வெளியூர் செல்வதற்கு
இதே போல, மறு மார்க்கமாக சொந்த ஊர் சென்ற பொது மக்கள் தங்கள் ஊர்களில் இருந்து சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்கு, பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து தேவைக்கேற்ப அரசு சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் வசதிக்காக சிறப்பு ஏற்பாடு…
தமிழகத்தில் வார இறுதி நாட்கள், அரசு விடுமுறை உள்ளிட்ட நாட்களில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது, வார இறுதி நாட்களுடன், தைப்பூச திருவிழாவும் சேர்ந்து வருவதால், ஏராளமான பயணிகள் அரசு பேருந்துகள் மற்றும் ரயில்களில் அதிகளவு பயணம் மேற்கொள்வார்கள். அவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 1,205 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வெடிகுண்டை அழிக்கும் பணி… காவலருக்கு ஏற்பட்ட சோகம்… படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி