தமிழகத்தில் முதன் முறையாக சோலார் படகு சேவை…எங்கு தெரியுமா… குஷியில் சுற்றுலா பயணிகள்!
Solar Boat Service Launched : தமிழகத்தில் முதன் முறையாக சூரிய ஒளி சக்தியால் இயங்கும் சோலார் மின் படகுகள் பிச்சாவரம் படகு சவாரி இல்லத்தில் தொடங்கப்பட்டுள்ளது . இந்த படகில் ஒரே நேரத்தில் 14 பேர் பயணம் செய்யலாம் .

மாதிரி புகைப்படம்
தமிழகத்தில் முதல் முறையாக சோலார் ( சூரிய ஒளி சக்தி) மூலம் இயங்கும் படகு சேவை கடலூர் மாவட்டம், பிச்சாவரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் கால நிலை மாற்ற துறையின் சார்பில் கால நிலை மீள் திறன் மிகு கிராமங்கள் தேர்வு செய்யும் பணி அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் சுற்றுச் சூழல் மற்றும் கால நிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் 11 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கிள்ளை பேரூராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டம், கிள்ளை பேரூராட்சி, பிச்சாவரம் சுற்றுலா மையம் படகு இல்லத்தில் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதனை, கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சி பி. ஆதித்யா செந்தில் குமார் தொடங்கி வைத்தார்.
மூன்று துறைகள் மூலம் பல்வேறு நடவடிக்கை
அப்போது, மாவட்ட ஆட்சி தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் சுற்றுலாத்துறை ஊழியர்களுடன் படகில் சவாரி செய்தார். இந்த திட்டத்தின் கீழ் கிள்ளை பேரூராட்சி பகுதியை பசுமையாகவும், வளம் நிறைந்த பகுதியாகவும் மாற்றும் வகையில், மீன்வளத்துறை, நீர்வளத்துறை, வனத்துறை ஆகிய துறைகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க: மின்சார வாகன உரிமையாளருக்கு புத்தாண்டு பரிசு…தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
பசுமை சுற்றுலாவாக மாற்றும் பணி
இதன் அடிப்படையில், பிச்சாவரம் படகு இல்லத்தில் காற்று மற்றும் நீர் மாசுபாட்டை குறைப்பதுடன், எரி பொருட்களின் தேவையை முற்றிலும் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பசுமை சுற்றுலாவாக மாற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், காலநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளும் கிராமங்களின் மீள் திறன்மிகு வளர்ச்சியை வலுப்படுத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
ரூ.24 லட்சம் மதிப்பில் சோலார் மின் படகு சேவை
இதற்காக ரூ. 24 லட்சம் மதிப்பில் முழுவதும் சோலாரால் இயக்கப்படும் சூரிய ஒளி மின் படகு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பிச்சாவரம் படகு சவாரி இல்லம் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாகும். இந்த பகுதிக்கு, கடலூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த பகுதிக்கு சுற்றுலாவுக்காக வந்து செல்வர்.
சோலார் மின் படகில் 14 பேர் பயணம்
இங்கு, மேற்கொள்ளப்பட்டு வரும் படகு சவாரியில் பயணம் செய்து, அலையாத்தி காடுகளின் அழகை சுற்றிப் பார்ப்பது அலாதி இன்பத்தை தரும். தற்போது, இந்த படகு சவாரி இல்லத்தில் சோலார் மின் படகுகள் இயக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படகுகளில் ஒரே நேரத்தில் 14 பேர் பயணம் செய்யலாம். இதன் காரணமாக பிச்சாவரம் படகு இல்லத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு.. நாளைக்குள் டோக்கன்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.. நியாய விலை கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?