கட்சி பெயரில் வந்த எம்ஜிஆர்.. தென்னந்தோப்பு சின்னம்.. புது கட்சி குறித்து விவரம் சொன்ன சசிகலா!
Sasikala New Party name and symbol: ஜெயலலிதாவின் நிழலாகப் பல ஆண்டுகள் பயணித்த சசிகலா, அதிமுகவில் முக்கிய சக்தியாகத் திகழ்ந்தார். இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து சசிகலா முறையாக நீக்கப்பட்டார்.

கட்சியின் பெயரை அறிவித்த சசிகலா
சென்னை, மார்ச் 13: “அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேறக்கழகம்” என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா. ஏற்கெனவே, அதிமுக தொண்டர் ஒருவர் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து தொடங்கிய கட்சியில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது கட்சிப் பெயரை அவர் அறிவித்துள்ளார். அதோடு, கட்சியின் சின்னமான தென்னந்தோப்பு சின்னத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், நாங்கள் எப்போதுமே ஒரு தோப்பு போல் இருக்கிறோம் என்பதை குறிக்கும் வகையில், கட்சிக்கு தென்னந்தோப்பு சின்னத்தை வைத்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இதையும் படிக்க: நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படுமா?
‘தனிமரம் தோப்பாகாது’:
எப்போதுமே, ‘தனிமரம் தோப்பாகாது’ என்ற பழமொழிக்கு ஏற்ப, நாங்கள் தனி மரமாக வரவில்லை தோப்பாக வந்துள்ளதாகவும் அவர் கூறினார். தொண்டர் ஒருவர் தொடங்கிய அதிமுகவில் எம்ஜிஆர் இணைந்ததை போல, தானும் முடிவெடுத்ததாகவும் கூறிய அவர், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிட உள்ளதாகவும் அவர் கூறினார்.
பிப்.24ல் புதிய கட்சி தொடங்கிய சசிகலா:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா, தனது நீண்டகால அரசியல் பயணத்திற்குப் பிறகு புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி கமுதியில் நடைபெற்ற நிகழ்வில், தனது புதிய கட்சியின் கொடியை அவர் அறிமுகப்படுத்தினார். அதில், அண்ணா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்கள் இடம்பெற்ற அந்தப் புதிய கொடியானது, அதிமுகவின் பாரம்பரிய நிறங்களான சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு கலவையுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அரசியல் களத்தில் புதிய அதிரடி:
சசிகலாவின் இந்த வருகை, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அவர் தொடங்கியுள்ள இந்தக் கட்சி, வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுமா அல்லது குறிப்பிட்ட அணிக்கு ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தனது ஆதரவாளர்களைக் கொண்டு தேர்தலைச் சந்திக்க சசிகலா திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, கட்சியின் பெயரை இன்று அறிவிக்க தனது முக்கிய ஆதரவாளர்களை போயஸ் கார்டன் இல்லத்திற்கு சசிகலா அழைத்திருந்தார். அங்கு வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவிலிருந்து நீக்கம் – பின்னணி:
ஜெயலலிதாவின் நிழலாகப் பல ஆண்டுகள் பயணித்த சசிகலா, அதிமுகவில் முக்கிய சக்தியாகத் திகழ்ந்தார். இருப்பினும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவிலிருந்து சசிகலா முறையாக நீக்கப்பட்டார். மீண்டும் கட்சியில் இணைய அவர் எடுத்த முயற்சிகள் அனைத்தும், எடப்பாடி பழனிசாமி தரப்பால் உறுதியாக மறுக்கப்பட்டன. இந்தத் தோல்விகளுக்குப் பிறகே, மாற்று அரசியல் பாதையைத் தேர்ந்தெடுக்க சசிகலா முடிவெடுத்ததாகக் கருதப்படுகிறது.
இதையும் படிக்க: தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்.. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட அதிகாரப் போட்டிகளுக்கு மத்தியில் சசிகலாவின் இந்தத் தனித்த அரசியல் முயற்சி, வரும் தேர்தலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதே தமிழகத்தின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.