சிலிண்டர் பதுக்கி வைத்து விற்பனை? திருப்பூரில் தனியார் கேஸ் நிறுவனத்துக்கு “சீல்”
Tiruppur Private Gas Company: திருப்பூரில் சிலிண்டர்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வததாக எழுந்த புகாரின் பேரில், தனியார் கேஸ் நிறுவனத்துக்கு மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர் "சீல்" வைத்தனர். அந்த நிறுவனத்தின் உரிமையாளர் நேரி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் இந்தியா முழுவதும் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட பெரிய நகரங்களில் சாதாரண தெரு கடைகள் முதல் பிரபலமான ஹோட்டல்கள் வரை மூடப்பட்டுள்ளன. சில கடைகளில் கலவை சாதம் மட்டும் வழங்கப்படுவதுடன், சில கடைகளில் சைடு டிஷ் ஆகியவை குறைக்கப்பட்டுள்ளன. இதேபோல, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதன் காரணமாக தனியார் கேஸ் நிறுவனங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது. இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தி திருப்பூரில் சில தனியார் கேஸ் நிறுவனங்கள் சிலிண்டர்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்து வருகிறது.
திருப்பூரில் சிலிண்டர் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை
இந்த நிலையில், சமையல் எரிவாயு உருளைகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்தால் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, குண்டர் சட்டத்திலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தலைமையிலான குழு தனியார் கேஸ் நிறுவனங்கள் மற்றும் குடோன்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது.
மேலும் படிக்க: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம்.. சமையல் எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்வு..
தனியார் கேஸ் நிறுவனத்தில் திடீர் சோதனை
அப்போது, வீரபாண்டி வாய்க்கால் மேடு பாரியூர் அம்மன் நகரில் தனியார் கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர்கள் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் கிடைத்தது. அதன் பேரில், சம்பந்தப்பட்ட தனியார் கேஸ் நிறுவனத்துக்கு மாவட்டம் வழங்கல் அதிகாரி சரவணன் தலைமையிலான குழு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது. அப்போது, அந்த கேஸ் நிறுவனம் மூடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, அந்த கேஸ் நிறுவனத்தின் உரிமையாளரை அதிகாரிகள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். ஆனால், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சரியான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தனியார் கேஸ் நிறுவனத்துக்கு “சீல்” வைப்பு
இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த கேஸ் நிறுவனத்தின் உள்ளே கேஸ் சிலிண்டர்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதி, மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் அந்த கட்டடத்துக்கு “சீல்” வைத்தார். மேலும், சம்பந்தப்பட்ட கேஸ் நிறுவனத்தின் உரிமையாளர் நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் உத்தரவிட்டுள்ளார். தனியார் கேஸ் நிறுவனத்தில் சிலிண்டர்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்த கேஸ் நிறுவனத்தை அதிகாரிகள் “சீல்” வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சிலிண்டர் தட்டுப்பாடு.. ஹோட்டல், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்.. அரசு அதிரடி அறிவிப்பு!!