எந்த பேச்சுவார்த்தையும் கூடாது.. அரசியல் கட்சிகளுக்கு ராமதாஸ் தரப்பில் எச்சரிக்கை..
PMK Internal Issue: தேர்தல் ஆணையம் செப்டம்பர் 9 மற்றும் நவம்பர் 27 அன்று வெளியிட்ட உத்தரவுகள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், அவை சட்ட அதிகாரம் அற்றவை என்றும் உயர் நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எந்த அரசியல் கட்சியும், தனிநபரும், அமைப்பும் மருத்துவர் அன்புமணி அல்லது வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, டிசம்பர் 26, 2025: மருத்துவர் அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராமதாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, எந்த அரசியல் கட்சிகளும் மருத்துவர் அன்புமணி அல்லது வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரையில், தந்தை மற்றும் மகன் இடையேயான அதிகாரப் போட்டி தொடர்ந்து நிலவி வருகிறது.
பாமக உட்கட்சி விவகாரம்:
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த கருத்து வேறுபாடுகள் நாளடைவில் பெரிதாகி, இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வரும் நிலைக்கு சென்றுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாட்டாளி மக்கள் கட்சி யார் வசம் இருக்கும் என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இது தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாமகவைப் பொறுத்தவரையில், தற்போது இருவரும் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வந்த ரவுடிக்கு நேர்ந்த கதி…பீர் பாட்டிலால் தாக்கி கொடூர கொலை!
இந்த நிலையில், அன்புமணி தரப்பில் நடைபயணம், போராட்டம் என தொடர் நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ராமதாஸ் இதனை கடுமையாக எச்சரித்து வருகிறார். அன்புமணிக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அன்புமணியின் செயல்பாடுகள் எண்ணிப் பார்க்கையில் வேதனையளிப்பதாக இருப்பதாகவும் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாகப் பிரிந்து சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், தேர்தல் ஆணையம் தரப்பில் அன்புமணிக்கு சாதகமாக மாம்பழச் சின்னம் அவரது தரப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதே சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக சென்னையில் உள்ள அலுவலகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இதனை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேர்தல் நடைபெறக்கூடிய சூழலில், சில அரசியல் கட்சிகள் அன்புமணியுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை:
இதனைத் தொடர்ந்து, ராமதாஸ் தரப்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பொதுமக்கள் அனைவருக்கும் கடைசியாக தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் டிசம்பர் 4 அன்று வழங்கிய தீர்ப்பின் மூலம், மருத்துவர் அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் கடும் பனிப் பொழிவு.. வரும் நாட்கள் எப்படி இருக்கும்? பனி அலெர்ட் இதோ!
மேலும், தேர்தல் ஆணையம் செப்டம்பர் 9 மற்றும் நவம்பர் 27 அன்று வெளியிட்ட உத்தரவுகள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், அவை சட்ட அதிகாரம் அற்றவை என்றும் உயர் நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, எந்த அரசியல் கட்சியும், தனிநபரும், அமைப்பும் மருத்துவர் அன்புமணி அல்லது வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட, சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் தவறாமல் மேற்கொள்ளப்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.