விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன் – தவெக நிர்வாகியின் பேச்சால் பரபரப்பு
Whistle Comment Creates Controversy : விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன் என தூய்மை பணியாளர்களை மிரட்டும் தொணியில் தவெக நிர்வாகி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

விஜய்யுடன் வி.எஸ்.பாபு
சென்னை, பிப்ரவரி 22 : சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புதிதாக களமிறங்கவுள்ளது. இதனையடுத்து தமிழக அரசியலில் தவெக தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி தற்போது மக்களிடையே எழுந்துள்ளது. விஜய் தற்போது தேர்தலை முன்னிட்டு மக்களை சந்தித்து வருகிறார். தவெக கட்சியின்னமாக விசில் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் தூய்மை பணியாளர்கள் விசில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் விசில் அடிக்காவிட்டால் உதைப்பேன் என தவெக நிர்வாகி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
தூய்மை பணியாளர்களை மிரட்டி தவெக நிர்வாகியால் சர்ச்சை
சென்னை வியாசர்பாடியில் தவெக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற்றது. அப்போது இந்த நிகழ்வில் பேசிய தவெக கட்சி நிர்வாகி வி.எஸ்.பாபு, நாம் விசில் அடித்தால் பயம்கொள்கிறார்கள். காலையில் எழுந்தவுடன் கேட்கும் சத்தம் துப்புரவு தொழிலாளிகளின் விசில் சத்தம் தான். நாம் அடிக்க வேண்டியதில்லை. அவர்களே சாலைகளில் அடித்து வருகிறார்கள். தற்போது விசில் அடிக்க கூடாது என்கிறார்கள். தூய்மை பணியாளரை அடிப்போம் என்றேன். விசில் அடிக்காவிட்டால் உதைப்போம் என்று அந்த வீடியோவில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : நாளை வேலூரில் தவெக நிர்வாகிகள் கூட்டம்.. போலீசார் விதித்த 20 நிபந்தனைகள்.. பயிற்சியுடன் தயாராகும் நிர்வாகிகள்..
மாநகராட்சி தரப்பில் தூய்மை பணியாளர்களை விசில் அடிக்க வேண்டாம். அதற்கு பதில் மைக் மூலம் அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. தவெக சின்னமாக விசில் அறிவிக்கப்பட்ட பிறேக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக அக்கட்சியின் சார்பில் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இந்த நிலையில் விசில் அடிக்காவிட்டால் உதைப்போம் என தவெக நிர்வாகி பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அரசு பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது சரியா என பலரும் கேள்வி ழுப்பி வருகின்றனர்.
முன்னதாக சிவகங்கையில் திமுக கவுன்சிலர் அயுப்கான் தனது வார்டை சேர்ந்த தூய்மை பணியாளர்களுக்கு விசில் அடிக்கக் கூடாது என்றும் அதற்கு மாறாக அரசு கொடுத்துள்ள தூய்மை பணியாளர்கள் பயன்படுத்த வேண்டிய பாடல் ஒலிக்கும் ஒலிப்பெருக்கியை கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தூய்மை பணியாளர்களை மிரட்டும் விதமாக தவெக நிர்வாகி பேசியிருக்கும் நிலையில் அக்கட்சியின் சார்பில் விளக்கம் அளித்து அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : “உங்கள் வீட்டு பில்லே சாட்சி”.. கையடக்க பிரிண்டருடன் வளம் வரும் அதிமுகவினர்.. திமுகவுக்கு எதிராக புதிய பிரசாரம்..
தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அடித்தட்டு மக்களான தூய்மை பணியாளர்களை இந்த மாதிரி மிரட்டும் தொணியில் பேசுவதை ஏற்க முடியாது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமூக நீதி கொள்கையை வைத்துள்ள ஒரு கட்சி பொது சேவையில் ஈடுபடும் இதுபோன்ற தொழிலாளர்களுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.