நொடிப்பொழுதில் நேர்ந்த கோர சம்பவம்.. அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து.. ஓட்டுநர் பலி.. 40 பயணிகள் காயம்!
Tindivanam Bus Lorry Collision : திண்டிவனம் அருகே அரசு விரைவு பேருந்து மீது அதிவேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் 40- க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர். மேலும், லாரியின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு தினந்தோறும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதே போல, நேற்று திங்கட்கிழமை இரவு ( ஏப்ரல் 27) நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து ஒன்று சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த பேருந்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தவிர்த்து 40- க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். இந்த பேருந்தானது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ( ஏப்ரல் 28) விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சலவதி பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது, திருவண்ணாமலையில் இருந்து புதுச்சேரி நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அரசு பேருந்து வருவதை கவனிக்காத லாரியின் ஓட்டுநர் நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். இதில், அதிவேகமாக வந்த லாரி மோதியதில் அரசு பேருந்து தலை குப்பிற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சென்னையில் இருந்து வந்த மற்றொரு லாரியும் விபத்தில் சிக்கியது.
சம்பவ இடத்திலேயே உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர்
இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 40- க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டனர். உடனே, அந்த வழியாக சென்றவர்கள் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக திண்டிவனம் போலீசார் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில். போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், 2- ஆவதாக விபத்தில் சிக்கிய லாரியின் ஓட்டுநரான விழுப்புரம் அருகேயுள்ள கிளியனூரை சேர்ந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் படிக்க: தேர்தல் முடிவுக்குப் பின் பதவி விலகும் செல்வப்பெருந்தகை?.. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ‘போட்டா போட்டி’..




40- க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்
இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூராய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும், காயமடைந்த 40- க்கும் மேற்பட்ட பயணிகள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
தப்பி ஓடிய லாரி ஓட்டுநருக்கு போலீஸ் வலைவீச்சு
இதைத்தொடர்ந்து, போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் விபத்துக்குள்ளான லாரி மற்றும் தலை குப்புற கவிழ்ந்த அரசுப் பேருந்து ஆகியவற்றை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். பின்னர், இந்த விபத்து தொடர்பாக திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க: புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வர அனுமதி?.. குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த காவல்துறை!!