Madurai Muruga Devotees Conference 2025: மதுரையில் இன்று பிரமாண்டமாக நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு..!

Madurai Muruga Devotees Conference 2025: மதுரையில் 2025 ஜூன் 22 அன்று இந்து முன்னணி சார்பில் பிரமாண்ட முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் மலையைப் போன்ற மேடை மற்றும் அறுபடை வீடுகளின் மாதிரி கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Madurai Muruga Devotees Conference 2025: மதுரையில் இன்று பிரமாண்டமாக நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு..!

இன்று முருக பக்தர்கள் மாநாடு

Updated On: 

22 Jun 2025 06:39 AM

மதுரை ஜூன் 22: மதுரையில் (Madurai) 2025 ஜூன் 22 ஆம் தேதி இன்று முருக பக்தர்கள் மாநாடு (Muruga Devotees Conference) விமர்சையாக நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் மலையை ஒத்த மேடையும், அறுபடை வீடுகள் மாதிரியான கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மதுரை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி (Governor R.N. Ravi) பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் (BJP leader Nainar Nagendran), தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் முன்னோட்டமாக பார்வையிட்டனர். 2025 ஜூன் 22 ஆம் தேதி இன்று மாலை கந்த சஷ்டி கவசம் அனைவரும் ஒன்றாக பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். பாதுகாப்பு அம்சமாக 1,500 போலீஸார் பணியில் ஈடுபட்டுள்ளனர். ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் ஆனந்தத்தில் கலந்துள்ளனர்.

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு

மதுரையில் 2025 ஜூன் 22 ஆம் தேதி இன்று நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலையை ஒத்த வடிவத்தில் பிரமாண்ட மேடையும், அறுபடை வீடுகளின் மாதிரி கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாநாடு மதுரை பாண்டிகோவில் அருகேயுள்ள அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் இன்று மாலை நடைபெற உள்ளது.

மாநாட்டில் முக்கிய தலைவர்கள் பங்கேற்பு

மாநாட்டை பார்வையிட மராட்டிய மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேற்று வந்தனர். அப்போது, சி.பி. ராதாகிருஷ்ணன், முருகன் தமிழ் கலாசாரத்தின் அடையாளமாக விளங்குகிறார் என்றும், மராட்டிய மாநிலத்திலும் முருகன் மாநாடு நடத்தத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

மாநாட்டுக்கு முன்னதாகவே, மாண்புமிகு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் சிறப்பு தரிசனம் செய்தனர். மாநாட்டிற்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள், ஏராளமான பக்தர்களை ஈர்த்து வருகின்றன. மதுரை முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

முருகனை வழிபட்டார் ஆளுநர் ரவி

திருப்பரங்குன்றம் மலையை ஒத்த மேடையில் அறுபடை வீடுகள் அமைப்பு

2025 ஜூன் 22 ஆம் தேதி இன்று மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக பிரமுகர்கள் ஹெச். ராஜா, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் அனைவரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து அடிப்படை வசதிகளும் தயார்

மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர் என்றும், வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து 5,000-க்கும் மேற்பட்டோர் வருவார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளாக பல தண்ணீர் பந்தல்கள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு பார்கிங் வசதிகள், சுகாதார முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்

மாநாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மற்றும் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மாநாட்டை ஒட்டி, ‘அரோகரா’ கோஷத்துடன் பக்தர்கள் உற்சாகமாக திரண்டுள்ளார்கள். இந்து முன்னணியின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த விழா, அரசியல் எல்லைகளை தாண்டி ஆன்மிகக் கருத்துக்களை ஒன்றிணைக்கும் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்துள்ளது.