Maha Shivaratri 2026: திருவண்ணாமலை உள்பட தமிழகத்தில் 12 கோவில்களில் இன்று மகா சிவராத்திரி பெருவிழா..
Maha Shivaratri 2026: கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழாவில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறாா்

கோப்புப் புகைப்படம்
நாடு முழுவதும் சிவன் கோவில்களில் இன்று மகா சிவராத்தி (Maha Shivaratri) உத்சவம் நடக்கிறது. இதையொட்டி, அனைத்து சிவ ஆலயங்களும் அலங்கரித்து காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்கள் உமாதேவி பூஜை செய்ததாகவும், இதேபோன்று சிவராத்திரி நாளில் பூஜிப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால், இன்று நாள் முழுவதும் விரதமிருந்து, சிவபுராணம் படிப்பதுடன் விடிய விடிய கண் விழித்திருந்து சிவபெருமானை வழிபடுகின்றனர். குறிப்பாக, கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழாவில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்வது வழக்கம்.
Also Read : மஹாசிவராத்திரியின் போது இந்த தவறுகளை செய்யாதீங்க!
12 கோவில்களில் சிவராத்திரி விழா:
அந்தவகையில், இன்று மகா சிவராத்திரியையொட்டி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் 12 கோவில்கள் சிவராத்திரி பெருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 9 கோவில்களில் மட்டுமே அறநிலையத்துறை சார்பில் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வந்தது. இதற்கு பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு கூடுதலாக 3 கோவில்களில் சிவாரத்திரி விழா நடத்தப்பட உள்ளது.
12 கோவில்களின் விவரம்:
அதன்படி, திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் கோவில், தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில், பேரூர், பட்டீசுவரர் கோவில், மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் கோவில், திருவாரூர், தியாகராஜசுவாமி கோவில், திருவாலங்காடு, வடாரண்யேஸ்வரசுவாமி கோவில், ராமேசுவரம், ராமநாத சுவாமி கோவில், கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம், விருத்தகிரீசுவரர் கோவில், தஞ்சாவூர் மாவட்டம், திருநாகேசுவரம் நாகநாத சுவாமி கோவில் ஆகிய 12 கோவில்களின் சார்பில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்றைய தினம் இந்த 12 கோவில்களிலும் மாலை 6 மணி முதல் நாளை (16ம் தேதி) காலை 6 மணி வரை மகா சிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.
திருவண்ணாமலையில் சிவராத்திரி பெருவிழா:
திருவண்ணாமலையில் நடைபெறும் சிவராத்திரி விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதன்படி அண்ணாமலையார் கோவிலில் மகா சிவராத்திரி விழா (பிப்.15) இன்று விமர்சியாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, அன்று அதிகாலை 3 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணிவரையில் அண்ணாமலையார் சன்னதியில் லட்சார்ச்சனை நடைபெறும். பக்தர்கள் சார்பில் லட்சார்ச்சனை நடைபெறுவது வழக்கம். மேலும் நள்ளிரவு 12மணிக்கு சுவாமி கருவறைக்கு மேற்கு திசையில் அமைந்துள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெறும்.
Also Read : மகா சிவராத்திரி 2026.. 300 ஆண்டுகளுக்குப் பிறகு சுப யோகங்களின் சேர்க்கை!
ஈஷா மையத்தில் சிவராத்திரி பெருவிழா:
கோவை ஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வரும் மகா சிவராத்திரி விழாவில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொள்வது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சிவராத்திரி விழாவில் பங்கேற்கிறாா். இதையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும் 7 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். மேலும், பக்தா்களின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.