முருக பக்தர்கள் மாநாடு : முக்கிய சாலைகளில் மதுரையில் போக்குவரத்து மாற்றம் – முக்கிய விவரம் இதோ

Madurai Murugan Conference: மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 22, 2025 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். இதனை முன்னிட்டு மதுரையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

முருக பக்தர்கள் மாநாடு : முக்கிய சாலைகளில் மதுரையில் போக்குவரத்து மாற்றம்  - முக்கிய விவரம் இதோ

மதுரை முருக பக்தர்கள் மாநாடு

Updated On: 

21 Jun 2025 21:51 PM

மதுரை (Madurai) பாண்டிக்கோவில் சாலையில் அமைந்துள்ள அம்மா திடலில், இந்து முன்னணியின் ஏற்பாட்டில் ஜூன் 22, 2025 அன்று முருக பக்தர்கள் மாநாடு (Madurai Murugan Conference) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகள் தத்ரூபமாக அமைக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை மற்றும் மாலை 2 மணி நேரங்கள் பூஜைகள் நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள், சக்தி வழிபாட்டு குழுக்கள், ஐயப்ப மற்றும் சாய்பாபா பக்தர்கள், ஆன்மிகவாதர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமாக வந்து தரிசனம் செய்து வருகின்றனர். சிறுவர்கள் முருகன் போன்று வேடமணிந்து பக்தியுடன் கலந்து கொள்கின்றனர். தினமும் மாலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் ஒலிக்கிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் குறித்து பக்தர்கள், ஒரே இடத்தில் அறுபடை வீடுகளையும் தரிசிக்கலாம் என்பது உணர்ச்சி மிகுந்த அனுபவமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

மாநாட்டின் சிறப்பம்சங்கள்

8 லட்சம் சதுர அடியில் பிரம்மாண்டமாக மேடைகள், இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாடும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. கலைநிகழ்ச்சிகள், ஆன்மிக உரையாடல்கள் நடைபெறவிருக்கின்றன. ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் தண்ணீர் மற்றும் உணவு வழங்கவிருக்கின்றனர். மேலும் மதுரை நகரில் மாணவர்களும் வாகன ஒழுங்குபடுத்துதல் போன்ற பணிகளை செய்யவிருப்பதாக கூறப்படுகிறது.  இந்த மாநாட்டில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர். இதில் 5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம் குறித்த விவரங்கள்

கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி. தென்மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் விரகனூர் சந்திப்பிலிருந்து மாற்று பாதையாக, அரவிந்த மருத்துவமனை சந்திப்பு, ஆவின் சந்திப்பு, கே கே நகர் ஆர்ச் சந்திப்பு, மார்க்கெட் சந்திப்பு வழியாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு செல்லலாம்.

ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென்மாவட்டங்களுக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் அனைத்து பெருத்துகளும் மீனாட்சி மிஷன் மருத்துவமளை சந்திப்பு, பாண்டி கோயில் சந்திப்பு, பி.சி. பெருங்காயம் சந்திப்பு, கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டார் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக வீரகலூர் ரவுண்டனா சந்திப்பு சென்று தொடர்ந்து மண்டேலா நகர் சந்திப்பு வழியாக செல்லலாம்.

பொதுமக்களின் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் செல்ல வேண்டிய மாற்றுப்பாதை

மதுரை நகரில் பி.சி பெருங்காயம் சந்திப்பில் இருந்து விழா நடைபெறும் இடமான கலைஞர் திடல் வழியாக விரகனூர் ரவுண்டானா சந்திப்பிற்கு செல்லக்கூடிய பொதுமக்களின் வாகனப் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படுகிறது.
இவ்வாகனங்கள் பி.சி பெருங்காயம் சந்திப்பில் இருந்து கருப்பாயூரணி, ஒத்த வீடு, ஆண்டார் கொட்டாரம், சக்கிமங்கலம், சிலைமான் வழியாக வீரகனூர் ரவுண்டானா செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலூர் சாலையிலிருந்து நேரடியாக திருமங்கலம் சாலை மார்க்கமாக திருமங்கலம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, இராஜபாளையம், திருநெல்வேலி, கள்வியாகுமரி மற்றும் அருப்புக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள், மேலூர் நான்கு வழிச்சாலை சந்திப்பிலிருந்து அலங்காநல்லூர் சாலை வழியாக தனிச்சியம் சந்திப்பிற்கு சென்று கப்பலூர் ரிங் ரோடு சாலையை பயன்படுத்தி விரைவாக செல்லலாம்.