மழைக்கால எதிரொலி: கோயம்பேட்டில் எகிறியது காய்கறி விலை…
Koyambedu Vegetable Prices: கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் வெங்காயம், பீன்ஸ், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் பெய்யும் கனமழையே இந்த திடீர் வரத்து சரிவுக்கு முக்கிய காரணமாகும். தற்போதைய சூழலில் தக்காளியின் வரத்து மட்டும் அதிகரித்துள்ளதால், அதன் விலை கிலோ 25 முதல் 30 ரூபாயாகக் குறைந்துள்ளது.
சென்னை கோயம்பேடு மொத்த விலை காய்கறி சந்தையில், கடந்த சில நாட்களாகவே பச்சை காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் அன்றாட சமையலுக்கு காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் இல்லத்தரசிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். குறிப்பாக, சமையலின் முக்கிய தேவையான பெரிய வெங்காயம் கடந்த வாரம் கிலோ 25 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 40 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல், கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்பனையான சின்ன வெங்காயத்தின் விலை, தற்போது கிலோவிற்கு 80 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தக்காளி விலை சரிவு மற்றும் பிற காய்கறிகளின் நிலவரம்
வெங்காயத்தின் விலை எகிறியுள்ள நிலையில், மற்ற அத்தியாவசிய காய்கறிகளான பீன்ஸ் கிலோ 110 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 80 ரூபாய்க்கும், கத்தரிக்காய் 50 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே வேளையில், கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது. சந்தைக்கு தக்காளியின் வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும். இதன் காரணமாக, கோயம்பேட்டில் தற்போது ஒரு கிலோ தக்காளி 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரையிலான மலிவான விலையில் தாராளமாகக் கிடைக்கிறது.
வரத்து குறைவே விலையேற்றத்திற்கு முக்கிய காரணம்
சென்னை கோயம்பேடு சந்தையின் தினசரி தேவையைப் பூர்த்தி செய்ய ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் சுமார் 10,000 டன் காய்கறிகள் வர வேண்டும். ஆனால், தற்போது போதிய விளைச்சல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு காரணமாக, நாள் ஒன்றுக்கு 6,000 முதல் 7,600 டன் வரையிலான காய்கறிகள் மட்டுமே சந்தைக்கு வந்து சேருகின்றன. இந்த கடுமையான வரத்து குறைபாடே தற்போதைய திடீர் விலை உயர்வுக்கு முதன்மைக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.
அண்டை மாநிலங்களில் கனமழை: நீடிக்கும் விலை உயர்வு அபாயம்
காய்கறிகள் அதிகம் விளையும் மாநிலங்களான கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற பகுதிகளில் தற்போது பரவலாகப் பெய்து வரும் கனமழையே இந்த வரத்து வீழ்ச்சிக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சிறு, குறு வியாபாரிகள் சங்கத் தலைவர் முத்துக்குமார் கூறுகையில், “பொதுவாக ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் காய்கறிகளின் விலை குறையும். ஆனால், இந்த ஆண்டு பிற மாநிலங்களில் பெய்து வரும் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், இன்னும் ஒரு மாதத்திற்கு இந்த விலை உயர்வு நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும், அடுத்த வாரங்களில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு 5 முதல் 10 ரூபாய் வரை மேலும் உயரக்கூடும்” என்று எச்சரித்துள்ளார்.