தவெகவில் இணைகிறாரா காளியம்மாள்…அவரது நிலைப்பாடு என்ன!
Kaliyammal Join Tamil Nadu Victory Party: நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவரின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தவர் காளியம்மாள். இவருக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவியதாக கூறப்படுகிறது. இதில், ஒருவருக்கொருவர் அதிருப்தியில் இருந்து வந்தனர். அப்போது, காளியம்மாள் தனிப்பட்ட முறையில் கூட்டம் நடத்துவதும், கட்சியில் உள்ளவர்களுக்கு பரிசுகள் அளிப்பதுமாக கட்சிக்கு அப்பாற்பட்டு செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த சீமான், காளியம்மாளிடம் கண்டித்ததாக கூறப்படுகிறது. மேலும், இது தொடர்பான ஆடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தன.
சீமான்-காளியம்மாள் இடையே மோதல் போக்கு
மேலும், கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற காளியம்மாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெறும் 10 நிமிடமே பேசினார் என்று கூறியிருந்தார். அதன் பிறகு, பேசத் தொடங்கிய சீமான், காளியம்மாள் கூறியது போல பத்து நிமிடம் சந்தித்து பேசிய என்னிடம் அனைத்து பொறுப்புகளையும் பிரபாகரன் விட்டு சென்றாரா என்பது போல இருவரும் பேசி இருந்தனர்.
மேலும் படிக்க: ஈரோடு செல்லும் விஜய்…தேதி…நேரம்…குறித்த செங்கோட்டையன்!




நாதகவில் ஒரங்கட்டப்பட்ட காளியம்மாள்
இது, நாம் தமிழர் கட்சியில் சீமான் மற்றும் காளியம்மாள் இடையே மேலும் புகைச்சலை ஏற்படுத்தியது. பின்னர், நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகப் போவதாக அரசல், புரசலாக பேசப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்டம், மணப்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் என்று இடம் பெற்றிருந்தது.
நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள்
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் காளியம்மன் விலகினார். அதன் பிறகு எந்த கட்சியிலும் தன்னை இணைத்துக் கொள்ளாமல் இருந்து வருகிறார். இதனிடையே, அவர் திமுகவில் ஐக்கியமாக போவதாக தகவல்கள் வெளியாகின. அதன்படி, அவர் திமுகவில் இணைந்தால் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பேசப்பட்டது. மேலும், புதிதாக கட்சி ஆரம்பித்து கூட்டணி அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தவெகவில் இணைகிறாரா காளியம்மாள்
ஆனால், அவர் அதற்கு பிடி கொடுக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் காளியம்மாள் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான முதல் கட்ட பேச்சு வார்த்தைகளும் முடிந்து இருப்பதாக கூறப்படுகிறது. அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் பட்சத்தில், அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. அண்மையில் பேட்டியளித்த காளியம்மாள் அனைவரும் ஒவ்வொரு கருத்தை கூறி வருகின்றனர். இதற்கான முடிவை ஒரு நாள் நான் கண்டிப்பாக அறிவிப்பேன் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: அன்புமணி தொடர்பான கேள்வி…பதில் அளிக்க மறுத்த ஜி.கே.மணி!