வாக்காளர் திருத்தப் பட்டியலை திமுக எதிர்ப்பது இதற்குதானா? நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!
special intensive revision: தமிழகம் முழுவதும் நேற்று திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனிடையே, தமிழகம் வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை, நவம்பர் 12: தமிழ்நாடு முழுவதும் SIR (special intensive revision) பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக போராட்டம் நடத்துவது ஆச்சரியம் அளிப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கை காரணமாக பல்வேறு பொருட்கள் விலை குறைந்துள்ளது. இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நிர்மலா சீதாரமான் நேற்று கோவை வந்தார். அங்கு பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் வரி குறைப்பு குறித்து கலந்துரையாடினார். அதோடு, கடைகளுக்கும் சென்று பொருட்களை வாங்கும் பொதுமக்களை சந்தித்தார். குறிப்பாக இல்லத்தரசிகளிடம் வரி குறைப்பு காரணமாக பலன் கிடைத்ததா என கேட்டறிந்தார்.
இதையும் படிக்க : கன்னியாகுமரியில் சுற்றித் திரிந்த 2 சிறுமிகள்.. பத்திரமாக மீட்ட போலீசார்!
தொடர்ந்து, கோவையில் நடந்த பாஜக கோவை கோட்ட அணி பிரிவுகள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், SIR நடவடிக்கையை பாஜக கொண்டு வந்தது போல் திமுக-வினர் பேசுகின்றனர். கடந்த 1952ம் ஆண்டு முதல் 13 முறை SIR நடைபெற்றுள்ளது. அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த திமுக எதுவும் செய்யாமல், தற்போது மட்டும் ஏன் போராட்டம் நடத்துகிறது என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு, முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்கிறோம் என புரியாமல் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். துணை முதல்வர் உதயநிதி SIR என்றால் என்ன என தெரியாமல் revision என்பதை restriction என சொல்கிறார்.
தங்களின் ஆட்சியின் தோல்விகளை மறைக்க திமுக இது போன்ற நிலைப்பாட்டை எடுத்து வருவதாகவும், எதிர்க்கட்சிகளோ, பாஜகவோ வெற்றி பெற்றால் EVM இயந்திரங்கள் மீது குற்றம்சாட்டுகின்றனர். திமுக வெற்றி பெறும்போது எதுவும் எதிர்த்து பேசுவதில்லை என்றும் சாடினார். தமிழ்நாட்டில் கொளத்தூர் தொகுதியில் மட்டும் 4,379 போலி வாக்காளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். ஒரே பெயர், ஒரே சொந்தக்காரர்கள் பெயர், ஒரே வயது. இருப்பினும் அட்டை எண்கள் மட்டும் வேறு. 933 வாக்காளர்கள் போலி முகவரியில் உள்ளனர். இதுபோன்ற முறைகேடுகளை நீக்க வேண்டாமா. கொளத்தூர் தொகுதியில் இத்தகைய முறைகேடுகளால் தான் ஸ்டாலின் வெற்றி பெற்றாரா என நாங்கள் கேட்கலாமா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க : SIR-க்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள திமுக கூட்டணி கட்சிகள்!
மேலும் பேசிய அவர், பீகாரில் தேர்தல் நடைபெறும் நிலையில், ராகுல் காந்தி ஹரியானாவில் வாக்கு திருட்டு நடந்துள்ளது என பேசுகிறார். பீகாரில் 22 லட்சம் வாக்காளர்கள் இறந்தவர்கள். இருப்பினும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 7 லட்சம் வாக்காளர்கள் ஒரு இடத்தில் மட்டுமின்றி மேலும் வேறு இடத்திலும் பெயர் பதிவு செய்துள்ளனர். அதோடு, 35 லட்சம் பேர் நிரந்தரமாக பீகாரை விட்டு வெளியேறி விட்டோம் என கூறியுள்ளனர். அப்படியென்றால், பீகாரில் மட்டும் 64 லட்சம் பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்க கூடாது. அதற்கு தான் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றார்.