சென்னையில் மின்சார ரயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை…பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்!
Suburban Railway Stations Digital Notice Board: சென்னையில் 48 மின்சார ரயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு பலகையில் ரயில்களின் வருகை, புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் காண்பிக்கப்படுகின்றன. இது பயணிகளுக்கு பெரிதளவில் உபயோகமாக இருக்கும்.

மின்சார ரயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை அமைப்பு
தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நவீன வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் நகரும் நடைமேடை, மின் தூக்கி, டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில் பரபரப்பாக இயங்கக்கூடிய முக்கிய ரயில் நிலையங்களில் சுமார் 48 மின்சார ரயில் நிலையங்களை டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் உள்ளிட்டவை குறித்து பயணிகள் எளிதாக அறியும் வகையிலும், பயணிகளுக்கான வசதியை மேம்படுத்தும் வகையிலும் இந்த அறிவிப்பு பலகைகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் பொருத்தி உள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், பலவந்தாங்கல், திருவான்மியூர், வேளச்சேரி, மீஞ்சூர், வில்லிவாக்கம், கோடம்பாக்கம், சானடோரியம், சைதாப்பேட்டை, கொரட்டூர் ஆகிய மின்சார ரயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.
திருவல்லிக்கேணி-சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையங்களில்…
இதே போல, திருவொற்றியூர், சேத்துப்பட்டு, கோட்டை, திரிசூலம், வியாசர் பாடி ஜீவா, அண்ணனூர், தரமணி, திருமயிலை, பட்டர வாக்கம், பெரம்பூர், மீனம்பாக்கம், கலங்கரை விளக்கம், லோகோ ஒர்க்ஸ் சேப்பாக்கம், அத்திப்பட்டு, அனுப்பம்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, பெருங்குடி, கஸ்தூரிபாய் நகர், திருவல்லிக்கேணி, கோட்டூர்புரம், வண்ணாரப்பேட்டை, கத்திவாக்கம், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ், கிரீன்வேஸ் சாலை, அத்திப்பட்டு புது நகர், மந்தைவெளி, இந்திரா நகர், ராயபுரம் ஆகிய மின்சார ரயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: 2 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. டெல்டாவில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ரிப்போர்ட் என்ன?
48 ரயில் நிலையங்களில் டிஜிட்டல் அறிவிப்பு பலகை
மேலும், பொன்னேரி, நந்தியம்பாக்கம், ஊரப்பாக்கம், மறைமலை நகர், முண்டக்கண்ணி அம்மன் கோவில், பேசின் பாலம், விம்கோ நகர் ஆகிய 48 மின்சார ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிக்காக டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு பலகையில் ரயில்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் ஆகியவை துல்லியமாகவும், உடனடி தகவலுடன் காட்டப்படுகிறது. மேலும், ரயில்களின் எண்கள், ரயில் நிலையங்களின் பெயர்கள், நடைமேடை விவரங்கள், தற்போதைய நிலை ஆகிய விவரங்கள் அந்த அறிவிப்பு பலகையில் காட்டப்படுகிறது.
பயணிகளுக்கு பெரிதளவு உதவியாக இருக்கும்
இந்த தகவல் அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக புரியும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையில், எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளதால் ரயில் நிலையங்களில் அதிக அளவு கூட்ட நெரிசல் இருந்தாலும், பகல் நேரத்திலும் இந்த அறிவிப்பு பலகையில் உள்ள தகவல்கள் தெளிவாக தெரிகின்றன. இந்த அறிவிப்பு பலகையின் மூலம் தினந்தோறும் மின்சார ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் முதல் முறையாக மின்சார ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பெரிதளவில் உதவியாக இருக்கும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: இரவில் குளிர், பகலில் வெயில்.. வரக்கூடிய நாட்களில் எப்படி இருக்கும்? வானிலை நிலவரம் என்ன?