முதியவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்.. டிஜிட்டல் கைது மூலம் ரூ.36 லட்சம் பறிப்பு..
Crime: முதியவர்களை குறிவைத்து டிஜிட்டல் கைது கும்பல் கோவையை சேர்ந்த இரண்டு பேரிடம் சுமார் 36 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளனர். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டபின், கோவை சைபர் க்ரைம் பிரிவு இந்த இரண்டு வழக்குகளிலும் விசாரனை மேற்கொண்டு வருகிறது.

கோவை: டிஜிட்டல் கைது மோசடியில் கோடிக்கணக்கில் பணத்தை இழந்த சென்னையை சேர்ந்த முதியவரை தொடர்ந்து, கோவையில் இரண்டு முதியவர்களை குறிவைத்து சுமார் 36 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் இப்போது மெய்நிகர் நீதிமன்றத்தையும் உருவாக்கி அதன் மூலம் மோசடி நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் நரேஷ் கோயெல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் அதே நடைமுறையை பின்பற்றி கோவையை சேர்ந்த இரண்டு முதியவர்களிடம் இருந்து சுமார் 36 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் கோவையில் உள்ள சைபர் செல்லில் புகார் அளித்துள்ளனர்.
டிஜிட்டல் கைது மோசடி சிக்கிய இரண்டு முதியவர்கள்:
கடந்த மாதம் சிங்காநல்லூரை சேர்ந்த 82 வயது முதியவர்டம் இருந்து 26 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. மோசடி செயலில் ஈடுபட்டவர்கள் அவரை அழைத்து நரேஷ் கோயல் பண மோசடி வழக்கில் அவரது பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவரது பெயருக்கு எதிராக கைது வாரண்ட் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் வீடியோ அழைப்பில் நீதிபதி முன் ஆஜராகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். அதன் பின் ஜாமின் பெற அவருக்கு ஆறு லட்சம் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், 24 மணி நேரம் whatsapp வீடியோ அழைப்பில் தொடர்பில் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆறு லட்சம் ரூபாய் செலுத்திய பிறகும் அவர்கள் கூடுதலாக பணம் கோரியுள்ளனர். 80 வயது நிரம்பிய அந்த நபர் தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து 10 லட்சம் ரூபாய் கூடுதலாக அனுப்பியுள்ளார். 10 லட்சம் பெறப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜாமின் வழங்க மேலும் 10 லட்சம் ரூபாய் செலவாகும் என குறிப்பிட்டுள்ளனர். மீண்டும் அவர் தனது மனைவியின் நகையை அடகு வைத்து அந்த தொகையை செலுத்தியுள்ளார்.
முதியவர்களை குறிவைக்கும் மோசடி கும்பல்:
அதேபோல் மற்றொரு வழக்கில் 71 வயதான முன்னாள் ராணுவ வீரருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்து அதில் இதே முறையை பயன்படுத்தி 10 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். வாட்ஸ் அப் மூலம் அந்த முதியவருக்கு கைதுவாரண்ட் ம்ற்றூம் நீதிமன்ற உத்தரவுகள் அனுப்பப்பட்டு நீதித்துறைக்கு மன்னிப்பு கடிதம் எழுதும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வாட்சப் காலில் இணையும்படியும் அழைப்பை துண்டிக்கக் கூடாது என்றும் அப்படி துண்டித்தால் அவரது குடும்ப உறுப்பினர்களும் விசாரணை வலையத்தின் கீழ் வருவார்கள் என்றும் மிரட்டப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அந்த முதியவர் ரிசர்வ் வங்கி அங்கீகரிக்கப்பட்ட மென்பொருள் மூலம் சரிபார்ப்புக்காக 10.3 லட்சத்தை மோசடி கும்பலிடம் வழங்கியுள்ளார். கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய சைபர் க்ரைம் பிரிவு இந்த இரண்டு வழக்குகளையும் தற்போது புகாரின் பேரில் விசாரித்து வருகின்றனர்.