சாலைகளில் குழந்தைகளை வைத்து யாசகம்.. அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!
குழந்தைகளை காட்டி யாசகம் பெறும் அந்த பெண்கள் பெரும்பாலும் தமிழ் பேசுவது இல்லை என்றும் வெயில் அதிகம் இருந்தாலும், வாகன போக்குவரத்து சத்தங்கள் அதிகம் இருந்தாலும் அந்த குழந்தைகள் கண் விழிக்காமல், கண் மூடியபடி உள்ளன. இதற்காக அந்த குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை வழங்கபடுகிறதா என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை, டிசம்பர் 06: சாலைகளில் பச்சிளம் குழந்தைகளை வைத்து யாசகம் பெறுவதை தடுக்க உரிய நடைமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஆர்.எஸ்.தமிழ்வேந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், சென்னையில் உள்ள பல சாலைகளிலும், போக்குவரத்து சிக்னல்களிலும் குழந்தைகளை வைத்து பெண்கள் யாசகம் பெறுகின்றனர். அந்த பெண்களிடம் உள்ள குழந்தைகள் எந்த நேரமும் தூங்கிக் கொண்டே இருப்பது பல சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதுமட்டுமல்ல அந்த குழந்தைகளுக்கு உண்மையில் அந்த பெண்கள் தாய்தானா? என்பதிலும் சந்தேகம் உள்ளது. ஏன் என்றால், யாசகம் பெறும் பெண்களுக்கும், அந்த குழந்தைகளுக்கும் எந்த உருவ ஒற்றுமையும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : மனைவியை கொலை செய்து வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த கணவன்.. கோவையில் பயங்கரம்!!
தமிழ் பேசாத பெண்கள்:
அதோடு, வெயில் அதிகம் இருந்தாலும், வாகன போக்குவரத்து சத்தங்கள் அதிகம் இருந்தாலும் அந்த குழந்தைகள் கண் விழிக்காமல், கண் மூடியபடி உள்ளன. இதற்காக அந்த குழந்தைகளுக்கு தூக்க மாத்திரை, ஏதாவது மருந்துகள் அல்லது மதுபானங்கள் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்டறிய வேண்டியது அவசியமாகிறது. குழந்தைகளை காட்டி யாசகம் பெறும் அந்த பெண்கள் பெரும்பாலும் தமிழ் பேசுவது இல்லை என்றும் சந்தேகம் கிளப்பியுள்ளார்.
குழந்தைகளை கடத்தி வந்து யாசகம்?
அதனால், இந்த குழந்தைகளை வேறு இடங்களில் இருந்து கடத்தி வந்து யாசகம் பெற பயன்படுத்தப்படுகிறதா? இந்த கொடூரமான செயல்களுக்கு பின்னணியில் இருக்கும் நபர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவது அவசியமாகிறது. இதுகுறித்து கடந்த ஆகஸ்ட் 8-ந்தேதி தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், சென்னை காவல் ஆணையர், போக்குவரத்து இணை காவல் ஆணையர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியிருந்தேன். ஆனால், அவர்கள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க: வாழைப்பழம் சாப்பிட்ட 5 வயது சிறுவன்.. உணவு குழாயில் சிக்கி மூச்சுத் திணறி உயிரிழந்த சோகம்!!
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:
இந்நிலையில், இந்த மனு நேற்று (டிசம்பர் 5) தலைமை நீதிபதி எம்.எம் ஸ்ரீவஸ்தவா மற்றும் ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பிறந்த பச்சிளம் குழந்தைகளை வைத்து யாசகம் பெறுவது என்பது மனிதாபிமானமற்ற செயல். குழந்தைகளை வைத்து யாசகம் பெறுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர்.
மேலும் இந்த மனு குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி, விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.