கரூர் கூட்ட நெரிசல்… சம்பவ இடத்தில் போலீசாரை நிறுத்தி சிபிஐ அதிகாரிகள் விசாரணை!
Karur Stampede CBI Inquiry : கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரை நிறுத்தி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, இந்த விசாரணை தொடர்பாக ஒத்திகை நடத்தி புகைப்பட எடுத்துக்கொண்டனர்.

கரூர் கூட்ட நெரிசல் இடத்தில் போலீசாரிடம் சிபிஐ விசாரணை
கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு பரப்புரை பயணத்தின் போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டு சுமார் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கரூரில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலையிலான குழு மேற்பார்வை செய்து வருகிறது. இதில், கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருந்தனர். இந்த நிலையில், மீண்டும் போலீசாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கூட்ட நெரிசல் நடந்த இடத்தில் போலீசாரை நிற்க வைத்து விசாரணை
அதன்படி, கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு சிபிஐ அதிகாரிகள் சமம் அனுப்பி இருந்தனர். அவர்கள், வேலுச்சாமிபுரத்திற்கு நேரில் வரவழைக்கப்பட்டு, சம்பவத்தன்று விஜயின் பிரச்சார வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்தை சுற்றி போலீசாரை நிறுத்தி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த கரூர் நகர துணை காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உள்பட 15 போலீசாரை சுற்றி நிற்க வைத்து, தடுப்பு கயிறு கட்டி அதனை புகைப்படமாக சிபிஐ அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.
மேலும் படிக்க: அண்ணா பல்கலை.மாணவர்கள் கவனத்துக்கு… மதிப்பெண் முறையில் புதிய மாற்றம்!
போலீசாரை நிறுத்தி ஒத்திகை பார்த்த சிபிஐ அதிகாரிகள்
அப்போது, விபத்து நிகழ்ந்த நேரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி செய்யப்பட்டிருந்தன. அந்த பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த விதம், போக்குவரத்து கட்டுப்பாடு, கூட்ட நெரிசலின் போது அவசர நடவடிக்கை முறையாக பின்பற்றப்பட்டது? என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டிருந்தனர். மேலும், அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் எப்படி செயல்பட்டிருப்பார்கள் என்பதை உறுதி செய்வதற்காக சம்பவ இடத்தில் போலீசாரை நிறுத்தி சிபிஐ அதிகாரிகள் ஒத்திகை பார்த்துள்ளனர். இந்த விசாரணையானது சுமார் அரை மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது.
விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
இந்த வழக்கில் முக்கியமான முடிவுகள் விரைவில் எடுக்கப்படுவதாகவும், இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சிபிஐ அதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயின் பிரச்சார வாகனத்தை சம்பவ இடத்துக்கு கொண்டு வந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். இதே போல, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் ஆகியோரிடம் புதுடெல்லியில் சிபிஐ விசாரணை மேற்கொண்டிருந்தது.
மேலும் படிக்க: மதுரையில் நடைபெறும் திமுக தேர்தல் முகவர்கள் மாநாடு.. சிறப்புரையாற்றும் முதல்வர் ஸ்டாலின்..