மதுரை ஆதினம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.. சம்மன் அனுப்ப போலீசார் முடிவு..
Chennai Crime News: மதுரை ஆதினம் மீது சென்னை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ வழக்கு பதிவு செய்துள்ளனர். மத ரீதியான பேச்சும், பகைமையை உண்டாக்கும் விதமாக பேசி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறி அவர் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை ஆதினம்
கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் மதுரை ஆதினம் கார் விபத்து தொடர்பாக பேசுகையில் இரு மதத்தினருக்கு இடையே கலவரம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக மதுரை ஆதீனத்தின் மீது புகார் எழுந்தது. வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் க்ரைம் போலீசார் மதுரை ஆதீனம் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த ஜூன் 17ஆம் தேதி ராஜேந்திரன் (வயது 66), சென்னை காவல்துறை ஆணையரிடம், ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார், 293-வது மடாதிபதி, மதுரை ஆதினம் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். சமீபத்தில் ஆறாவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடானது தருமபுரி ஆதினம் ஏற்பாட்டில் சென்னை அருகே, காட்டாங்குளத்தூரில் SRM பல்கலைக்கழகத்தில் வைத்து மே முதல் வாரத்தில் நடைபெற்றது. இம்மாநட்டில் பங்கேற்பதற்காக சைவ ஆதினங்களில் மிகப் பழமையான ஆதினமான மதுரை ஆதினம் மதுரையிலிருந்து, சென்னைக்கு, தனக்கு சொந்தமான டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் சென்றுள்ளார்.
மதுரை ஆதினம் சொன்ன கருத்து:
2025, மே 2 ஆம் தேதி அன்று காலை சுமார் 9.40 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அஜீஸ் நகர, அணுகுசாலை அருகே அவர் பயணித்த கார் சென்று கொண்டிருந்த போது ,அவர் கார் மீது மற்றொரு கார் மோதியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து மறு நாள் நடைபெற்ற சைவ சித்தாந்த மாநாட்டில் அவர் பேசுகையில், “என்னை கொலை செய்ய சதி செய்துவிட்டார்கள். இதில் பாகிஸ்தான் ஈடுபட்டு இருக்கலாம், தருமபுரி ஆதினத்தின் ஆசியால் நான் காப்பாற்றப்பட்டுள்ளேன். மீனாட்சி சுந்தரேசுவரர் தான் என்னைக் காப்பாற்றினார். ஒரு நல்ல காரியத்தை இப்போது எங்கும் பேச முடிவதில்லை.” எனப் பேசியுள்ளார்.
மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில், “விபத்து ஏற்படுத்தியவர்கள் குல்லா அணிந்திருந்தார்கள்; தாடி வைத்திருந்தார்கள்; காரில் நம்பர் பிளேட் இல்லை; ரொம்ப தூரம் துரத்தி வந்து, பேரிகார்டை உடைத்து வந்து எங்கள் கார் மீது மோதினார்கள். நேரமையானவர்களாக இருந்திருந்தால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருப்பார்கள், ஆனால், மோதிவிட்டு தப்பி ஓடிவிட்டார்கள்” என்று மத ரீதியான அடையாளங்களைச் சொல்லி தன்னைக் கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக, பேட்டி அளித்திருந்தார்.
சிசிடிவி காட்சிகளில் சிக்கிய உண்மை:
இதையடுத்து, மதுரை ஆதீனம் அளித்திருந்த பரபரப்பான புகார் தொடர்பாக சம்பவ இடத்தில் நடைபெற்ற கண்காணிப்பு கேமரா பதிவு அடங்கிய வீடியோ ஒன்று தமிழ்நாடு காவல்துறை சாரபில் வெளியிடப்பட்டது. அதில், திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாக செல்வதும், அப்போது சாலையின் இடதுபுறமிருந்து கட்டுப்பாடான வேகத்தில் வந்து கொண்டிருந்த மற்றொருக்காரை மதுரை ஆதினத்தின் கார் அதிவேகமாக கடப்பதும், நெடுஞ்சாலையின் இடதுபுறமுள்ள சாலையிலிருந்து வந்து கொண்டிருந்த கார் மதுரை ஆதீனத்தின் கார் மீது இடித்து விடாமல் இருக்க துரிதமாக ப்ரேக் போடுவதும், அதனால் இருவாகனங்களும் மோதிக்கொள்வது தவிர்க்கப்படுவதுமான காட்சிகள் பதிவாகி இருந்தன.
புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயம்:
” சிசிடிவி காட்சியில் உண்மை வெளியானதை அடுத்து மதுரை ஆதீனம் சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும் நோக்கோடு, பரபரப்புக்காக மாற்று மத அடையாளங்களுடன் வந்த நபர்களின் கார், தான் பயணித்த கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாகவும், அதிர்ஷ்டவசமாக தான் உயிர் பிழைத்ததாகவும், அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் பேசியதன் மூலமும், செய்தியாளர்கள் சந்திப்பில், “இந்த சம்பவம் தொடர்பாக போலீஸில் புகார் தரவில்லை; ஆண்டவன் சிவபெருமானிடம் புகார் தந்து விட்டேன் என கூறி சென்றார்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் நிலவி வரும் சமூக நல்லிணக்கம் கெட்டுப்போய் பொது அமைதிககுப் பங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. மதுரை ஆதினம் எந்தவித சமூக பொறுப்புணரவும் இல்லாமல் கருத்துக்களை வெளியிட்டு பொதுமக்கள் மற்றும் அவரது பக்தர்கள் மத்தியில் பதற்றத்தை உருவாக்கியுள்ளனர். மேலும், மதுரை ஆதினம் அவர்கள் சமூக வலைதள பக்கங்களில் உண்மைக்கு மாறான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
, இரு பிரிவினர்களுக்கு இடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் வகையிலும், மேலும் பொதுமக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தும் விதமாகவும் உள்ளதால்”, ஹரிஹர ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரியார் 293 வது மடாதிபதி மதுரை ஆதீனம் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு புகாரில் தெரிவித்துள்ளார்.
4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு:
இந்தப் புகார் இணை சென்னை கிழக்கு மண்டல சைபர் கரை போலீசார் விசாரணை செய்து நான்கு பிரிவுகளின் கீழ் மதுரை ஆதீனத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில் செயல்படுதல், பொதுத் தீமைக்கு வழிவகுக்கும் அறிக்கைகள் அல்லது தவறான தகவல்களைப் பரப்புதல், உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மதுரை ஆதீனத்திற்கு சம்மன் அனுப்பியும் விசாரணை நடத்த சென்னை சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.