Tiruvannamalai: தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காய்.. குழந்தை பலி
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரத்தில், தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஐந்து மாத குழந்தையின் தலையில் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின், வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

திருவண்ணாமலை, ஆகஸ்ட் 22: திருவண்ணாமலை மாவட்டத்தில் தென்னை மரத்திலிருந்து தேங்காய் ஒன்று விழுந்ததில் ஐந்து மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே தேவிகாபுரம் என்ற ஊர் உள்ளது. இந்த ஊரில் தான் சோக சம்பவமானது நடைபெற்றுள்ளது. அதாவது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சப்பள்ளி தாலுகாவில் உள்ள வலசை கவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் அழகேசன் என்பவரது மகன் சிலம்பரசன். இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருவண்ணாமலையில் மாவட்டம் தேவிகாபுரத்தை அடுத்துள்ள மலையம்புரடை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரது மகள் அமுதா என்பவருக்கும் கடந்த 2024 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இப்படியான நிலையில் இவருக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்திருந்தது. பிரசவத்திற்காக மனைவி அமுதாவை சிலம்பரசன் தனது மாமனார் வீட்டுக்கு அனுப்பி வைத்திருந்தார். கடந்த ஐந்து மாதங்களாக அவர் மலையம்புரடை கிராமத்திற்கு வந்து குழந்தையையும் மனைவியும் பார்த்துவிட்டு பணிக்கு திரும்புவதை வழக்கமாக வைத்திருந்தார். இப்படியான நிலையில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 20) குழந்தையை அமுதாவின் தந்தை ராஜா தனது தோளில் சாய்த்தபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார்.
Also Read: பச்சிளம் குழந்தையை வீடு புகுந்து கவ்விச்சென்ற தெருநாய்.. அதிர்ச்சி சம்பவம்!




அப்போது அங்கிருந்த தென்னை மரம் ஒன்றிலிருந்து முற்றிய தேங்காய் ஒன்று எதிர்பாராத விதமாக விழுந்தது. அதே நேராக குழந்தையின் தலை மீது விழுந்ததால் குழந்தை சுயநினைவின்றி மயங்கியது. இதனைக் கண்டு பதறிப்போன குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் குழந்தையை தூக்கிக்கொண்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் தனியார் மருத்துவமனைக்கு குழந்தை அழைத்து செல்லப்பட்டது.
அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தந்தை சிலம்பரசன் கொடுத்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன்.. தண்ணீர் தொட்டியில் விழுந்து பலியான சோகம்!
அதிகரிக்கும் குழந்தை மரணங்கள்
சமீப காலமாக பெற்றோர்களின் கவனக்குறைவு உள்ளிட்ட சில காரணங்களால் குழந்தைகள் உயிரிழந்து வருவது பெரும் கவலை அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. திருவாரூரில் வீட்டுக்குள் புகுந்த தெரு நாய் ஒன்று பச்சிளம் குழந்தையை கவ்விச் சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல் நான்கு வயது சிறுவனுக்கு பெற்றோர் காய்ச்சலுக்காக மாத்திரை கொடுத்த நிலையில் அது தொண்டையில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை உண்டாக்கியது. எனவே குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் கவனமுடன் செயல்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தியுள்ளனர்.