IND vs ENG: கம்பீர் அப்படி பண்ணியிருக்கக் கூடாது.. ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில், தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஜஸ்ப்ரீத் பும்ரா மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என வெளியிட்ட தகவலை ஆகாஷ் சோப்ரா கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த தகவல் வெளியானதால், இங்கிலாந்து அணிக்கு சில திட்டங்களை வகுக்கும் என அவர் கூறியுளார்.

IND vs ENG: கம்பீர் அப்படி பண்ணியிருக்கக் கூடாது.. ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்!

பும்ரா, கம்பீர், ஆகாஷ் சோப்ரா

Updated On: 

28 Jun 2025 08:16 AM

இங்கிலாந்துக்கு (England) எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி (Team India) விளையாட சென்றுள்ள நிலையில், தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் (Gautham Gambhir) தவறு ஒன்றை செய்து விட்டதாக முன்னாள் இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா கடுமையாக சாடியுள்ளார். ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய அணி இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த பிறகு நடைபெறும் முதல் தொடர் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டு அவர் தலைமையிலான அணி விளையாடி வருகிறது. லீட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் ஜூலை 2 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

பும்ரா விளையாடுவது சந்தேகம்

இதனிடையே இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் டெஸ்ட் கேப்டனாக சில போட்டிகளில் ஆடியுள்ள அவரை தான் பிசிசிஐ முதலில் இங்கிலாந்து தொடருக்கு கேப்டனாக நியமிக்க விருப்பப்பட்டது. ஆனால் காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த பும்ரா தன்னால் 5 போட்டிகளில் விளையாட முடியாது. கேப்டனாக இருப்பதை விட ஒரு வீரராக அணிக்கு பங்களிப்பு செய்ய விரும்புவதாக கூறியதாகவும் சொல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து முதல் போட்டியில் பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸில் எதுவும் விக்கெட் எடுக்கவில்லை. இப்படியான நிலையில் தான் அவர் 2வது போட்டியில் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டு வருகிறது.

ஆகாஷ் சோப்ரா கடும் விமர்சனம்

இந்த நிலையில் தனது யூட்யூப் சேனலில் முன்னாள் இந்திய அணி வீரர் ஆகாஷ் சோப்ரா, தற்போதைய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கம்பீரை கடுமையாக சாடியுள்ளார். அதாவது இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நிலையில் பணிச்சுமை காரணமாக பும்ரா ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மூன்றில் மட்டுமே விளையாடுவார் என்று கவுதம் கம்பீர் தெரிவித்திருந்தார். இதனைச் சுட்டிக் காட்டிய ஆகாஷ் சோப்ரா, மூன்று போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என கம்பீர் சொல்லியிருக்கக்கூடாது.

அது ஏன் ரகசியமாக வைக்கப்படாமல் இருந்தது என கேள்வி எழுப்பிய அவர், இந்திய அணியின் பெரிய பலம் பும்ரா என்பது எதிரணிக்கும் தெரியும். அவர் ஏற்கனவே ஒரு போட்டியில் ஆடி விட்டார். மீதமுள்ள 4ல் இரண்டில் தான் விளையாடுவார் என்றால் அதற்கேற்ப ஆடுகளங்களை இங்கிலாந்து அணி தயார் செய்யலாம். இது ஒரு தீவிரமான பிரச்சினை என்பதை உணர வேண்டும். பும்ராவை மட்டும் நம்பாமல் அடுத்த தலைமுறை வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாக வேண்டும். முகமது சிராஜ் நல்ல வேகப்பந்து வீச்சாளர் என்றாலும் அவர் இன்னும் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் முகம்மது ஷமியின் வேகத்தை எட்டவில்லை என ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.