AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs England 2nd Test: வெற்றிக்காக 58 ஆண்டுகள் காத்திருப்பு! இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைக்குமா இந்தியா..?

Edgbaston Pitch Report: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி ஜூலை 2, 2025 அன்று எட்ஜ்பாஸ்டனில் நடைபெறுகிறது. லீட்ஸில் தோல்வியடைந்த இந்திய அணி, 58 ஆண்டுகளாக எட்ஜ்பாஸ்டனில் வெற்றி பெறாத வரலாற்றை மாற்ற வேண்டும். எட்ஜ்பாஸ்டன் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பும்ரா இல்லாமல் இந்திய அணி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இந்த கட்டுரை விவரிக்கிறது.

India vs England 2nd Test: வெற்றிக்காக 58 ஆண்டுகள் காத்திருப்பு! இங்கிலாந்தை வீழ்த்தி வரலாறு படைக்குமா இந்தியா..?
இந்திய கிரிக்கெட் அணி - இங்கிலாந்து கிரிக்கெட் அணிImage Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 01 Jul 2025 16:53 PM IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு (India vs England Test Series 2025) இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டி வருகின்ற 2025 ஜூலை 2ம் தேதி முதல் பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் (Edgbaston) நடைபெறுகிறது. லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி (Indian Cricket Team), இப்போது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. இருப்பினும், இந்திய அணிக்கு சவால் எளிதானது அல்ல. இங்கிலாந்து அணியை சமாளிக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், 58 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் ஒரு வரலாற்றையும் இந்திய அணி மாற்ற வேண்டும். எட்ஜ்பாஸ்டனில் இதுவரை எந்த டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி இருக்கும்..?


டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை, எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தில் நிறைய புல் இருந்தது. இதன் காரணமாக, பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெப்பம் மற்றும் வெயில் காரணமாக, போட்டிக்கு முன்பு ஸ்டேடியத்தில் உள்ள புல் வெட்டப்பட்டது. சமீபத்திய பிட்ச் அறிக்கையின்படி, இப்போது இந்த ஸ்டேடியத்தில் பேட்ஸ்மேன்கள் ரன்கள் எடுப்பது எளிதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

எட்ஜ்பாஸ்டனின் வரலாறு

எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியம் இந்தியாவிற்கு சாபக்கேடாகவே இருந்து வருகிறது. எட்ஜ்பாஸ்டன் ஸ்டேடியத்தின் வரலாறு 153 ஆண்டுகள் பழமையானது. இந்திய அணி இந்த ஸ்டேடியத்தில் விளையாடத் தொடங்கி 58 ஆண்டுகள் ஆகிறது. 1967ம் ஆண்டு இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை இங்கு விளையாடியது. இதுவரை இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி இங்கு 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்தியா இதில் 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. அதே நேரத்தில், 1986ம் ஆண்டு நடந்த ஒரு போட்டியை மட்டும் இந்திய அணி டிரா செய்தது. அதாவது இன்றுவரை இந்த மைதானத்தில் இந்தியா எந்த டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெறவில்லை. எட்ஜ்பாஸ்டனில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் மற்ற ஆசிய அணிகளின் நிலையும் இந்தியாவைப் போலவே உள்ளது. அது பாகிஸ்தானாக இருந்தாலும் சரி, இலங்கையாக இருந்தாலும் சரி. பாகிஸ்தானும் எட்ஜ்பாஸ்டனில் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 5 போட்டிகளில் தோல்வியடைந்து 3 போட்டிகளை டிராவில் முடித்துள்ளது. இலங்கை எட்ஜ்பாஸ்டனில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது.

2022 ஆம் ஆண்டு எட்ஜ்பாஸ்டனில் இந்தியா கடைசியாக ஒரு டெஸ்ட் விளையாடியபோது, ​​ஸ்கிரிப்ட் லீட்ஸ் டெஸ்டில் நடந்ததைப் போலவே இருந்தது. இந்திய அணி இங்கிலாந்துக்கு 373 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. இங்கிலாந்து அந்த இலக்கை எளிதாக அடைந்தது. அப்போது, இந்திய அணியின் கேப்டன் பதவி ஜஸ்பிரித் பும்ராவிடம் இருந்தது. இந்த முறை பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்காக விளையாடியபோதும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெறவில்லை.

Follow Us