பாகிஸ்தானில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தற்போது பெரிய சிக்கலை சந்தித்துள்ளது. காரணம் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக பாகிஸ்தானின் தீவிரவாத ஆயுதக் குழு ஒன்று மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த தொடர் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த ஜமாத் உல் அஹ்ரார் என்ற ஆயுத அமைப்பு பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், டேரில் மிட்செல் உள்ளிட்ட வீரர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு மிரட்டல்
மேலும், மேற்சொன்ன கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானுக்கு வரக்கூடாது ன்றும் வந்தால் அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மிரட்டல் குறித்து அந்த அமைப்பை சேர்ந்த கமாண்டர் தெரிவித்ததாவது, நாங்கள் கிரிக்கெட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் பாதுகாப்பு நிலைமை சரியாக இல்லாததால் இத்தகைய பெரிய போட்டிகளை நடத்துவது ஆபத்தானது. வெளிநாடு கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிக்க : IPL 2026: 15க்கும் அதிகமான வீரர்கள் காயம்.. பரிதாப நிலையில் ஐபிஎல் 19வது சீசன்!
பாகிஸ்தான் அமைப்பு மிரட்டல்
அதனைத் தொடர்ந்து வீரர்கள் எச்சரிக்கையை மீறி போட்டிகளில் பங்கேற்றால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம். இந்த போட்டி நடைபெறாமல் தடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே பிஎஸ்எல் தொடரை 2 நகரங்களில் மட்டுமே நடத்த முடிவு செய்துள்ளது. அதுவும் ரசிகர்கள் இல்லாமல் நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு ஆகிய பகுதிகளில் நிலவும் பதற்றம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகின்றன.
இதையும் படிக்க : IPL 2026: ரோஹித்துடன் தொடக்கம் யார்..? அசைக்க முடியாத மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளேயிங் லெவன்!
இந்த ஆண்டுக்கான பிஎஸ்எல் தொடரில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஆடம் சம்பா, மொயீன் அலி, டெவான் கான்வே போன்ற பல சர்வதேச வீரர்கள் பங்கேற்கவிருந்தனர். தற்போது அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் பங்கேற்பதில் சந்தேகம் நிலவுகிறது.
வருகிற மார்ச் 26, 2026 தொடங்கவுள்ள நிலையில் இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? அதில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்களா என்ற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. குறிப்பாக வெளிநாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.