Vastu Tips: நெருங்கும் மழைக்காலம்.. பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள் என்ன?

மழைக்காலம் வருவதற்கு முன், வீட்டை வாஸ்து சாஸ்திரப்படி தயார் செய்வது மிகவும் அவசியம் என சொல்லப்பட்டுள்ளது. நீர் சேமிப்பு, வீடு பழுதுபார்த்தல், நிலத்தின் சரிவு ஆகியவற்றை சரிபார்த்து சீரமைக்க வேண்டும். தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும், வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் நீர் சேமிப்பை மேற்கொள்ள வேண்டும்.

Vastu Tips: நெருங்கும் மழைக்காலம்.. பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள் என்ன?

வாஸ்து டிப்ஸ்

Published: 

27 Jun 2025 13:30 PM

மழையானது இயற்கை நமக்களித்த கொடை என சொல்லலாம். இந்தியா தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என இரண்டு வகையான பருவத்தில் இயற்கையின் அழகையும் காண்கிறது. இதனைத் தவிர புயல், காற்றழுத்தம் ஆகியவை காரணமாகவும் மழை பெய்யும். மழையைப் பார்ப்பது என்றாலே பலருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். அதேசமயம் வாஸ்து சாஸ்திரத்தின் படி, மழைப்பருவம் வருவதற்கு முன்பு நாம் சில சிறப்பு ஏற்பாடுகளை வீட்டில் கட்டாயம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக மழைக்காலம் உங்கள் வீட்டிற்கு மகிழ்ச்சியையும் தரும் என நம்பப்படுகிறது. மழையின் எதிர்மறை தாக்கத்திலிருந்து விடுபட உங்கள் வீட்டை வாஸ்துவுக்கு ஏற்றதாக மாற்ற வேண்டும். அதனைப் பற்றிக் காணலாம்.

பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்

நீரை சேமிப்பது: மழைக்காலம் வருண பகவானின் ஆசிர்வாதமாக பார்க்கப்படுகிறது. இந்து புராணங்களின் நம்பிக்கைகளின்படி, வருண பகவான் நீரின் கடவுளாக அறியப்படுகிறார். அதனால் தான், மழைக்காலத்திற்கு முன் அவரது வருகைக்கு தயாராகிவிடுவது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதற்காக, வீட்டில் உள்ள நீர் ஆதாரங்களைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். வாஸ்து படி, நீரின் திசை வடக்கு, வடகிழக்கு என்று கருதப்படுகிறது. எனவே இந்த பகுதிகளில் நீர் சேமிப்பு தொட்டி, நீரூற்று போன்றவை அமைக்கலாம். மேலும் நீங்கள் மழைநீரைச் சேமிக்க விரும்பினால், அதனை இந்த திசைகளில் தான் செயல்படுத்த வேண்டும்.  அதேசமயம் இந்த இடம் சுத்தமாகவும் வெளிச்சமாகவும் வைக்க வேண்டும். இந்த திசையில் ஏதேனும் தடைகள் இருந்தால், அதை மழைக்காலத்திற்கு முன் அகற்றவும். தேவைப்படும் நீரை சேமிக்கவும், தேவையில்லாத நீரை சரியாக உபயோகிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். நீரை எக்காரணம் கொண்டும் தேவையில்லாமல் செலவழிக்கக்கூடாது.

வீடு பழுதுபார்த்தல்: வீட்டில் பழுதுபார்ப்பு என்பது ஒவ்வொரு ஆண்டும் மழைக்கு முன் செய்ய வேண்டிய அவசிய வாஸ்து விஷயமாகும். சுவர்களில் விரிசல்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் சேதம், மேற்கூரையில் விரிசல் ஆகியவை இருந்தால் தண்ணீர் கசிவு உண்டாகும். வாஸ்துவின் படி, வீட்டினுள் ஈரமான சுவர்கள் இருந்தால் அவற்றில் எதிர்மறை ஆற்றல் நிறைந்திருக்கும். எனவே மழைக்காலத்திற்கு முன் தண்ணீர் கசிவுகள் அல்லது வடிகால் அமைப்பைச் சரிசெய்யவும்.

நிலத்தின் சரிவு: மழைக்கு முன், நிலத்தின் அளவை கவனமாக சரிபார்க்கவும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் பிரதான நுழைவாயிலிலிருந்து நிலத்தின் சரிவானது வடக்கிலிருந்து தென்கிழக்கு திசையை நோக்கி அல்லது கிழக்கிலிருந்து மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும். உங்கள் பிரதான நுழைவாயிலில் தண்ணீர் தேங்கக்கூடாது. இந்த திசைகளில் ஒரு சாய்வு இருக்க வேண்டும், இதனால் தண்ணீர் மெதுவாக வெளியேறும். அதேபோல் வீட்டின் தெற்கு மற்றும் தென்கிழக்கு திசைகள் அக்னி ஸ்தலமாகும். இங்கு தண்ணீர் தேங்க விடாதீர்கள். இந்த திசைகளில் வீட்டில் ஏதேனும் பொருட்கள் அல்லது பழுது ஏற்பட்டால் அவற்றை உடனடியாகச் சரி செய்யுங்கள். தவறுதலாக கூட இந்த திசைகளில் தண்ணீர் தேங்க விடாதீர்கள்.

நல்ல மணம் வீசுதல்: மழையின் காரணமாக பூமிப்பரப்பு குளிர்வதால் ஈரமான மணம் வித்யாசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். இதனால் உங்கள் வீட்டில் பொருத்தமான வாசனை திரவியங்களைப் பயன்படுத்தலாம். ஈரப்பதத்தின் மணம் எதிர்மறையை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது மழைக்காலத்திலும் நேர்மறை எண்ணங்களுடன் வீடு இருப்பதை உறுதிசெய்ய, உங்கள் வீட்டில் நறுமணமாக அத்தியாவசிய எண்ணெய்கள், மசாலாப் பொருட்கள் அல்லது படிகாரத்தை வைத்திருங்கள்.

மழைக்காலத்திற்கு முன்பு இந்த அனைத்து வாஸ்து தொடர்பான நடவடிக்கைகளையும் எடுத்து, வீட்டை மாற்றுவதன் மூலம், மழைக்காலம் தொடங்கும் போது வீடு நேர்மறை சக்திகள் நுழைய தயாராக இருக்கும் என நம்பப்படுகிறது.

(வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)