AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராமரின் சிவ வழிபாடு.. நிற்கும் அம்பாளுக்கு உட்கார்ந்த நிலையில் அலங்காரம்.. இந்த கோயில் தெரியுமா?

அகத்திய முனிவரின் வரலாற்றுடன் தொடர்புடைய இந்தக் கோயிலில், செண்பகவல்லி அம்மனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இக்கோயிலில் சித்திரைத் தீர்த்தம், வசந்த உற்சவம், நவராத்திரி போன்ற திருவிழாக்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இக்கோயில் பல்வேறு மதத்தினரின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. கோவில்பட்டியில் அமைந்திருக்கும் இந்த கோயில் பற்றி காணலாம்.

ராமரின் சிவ வழிபாடு.. நிற்கும் அம்பாளுக்கு உட்கார்ந்த நிலையில் அலங்காரம்.. இந்த கோயில் தெரியுமா?
செண்பகவல்லி அம்மன் கோயில்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 22 Apr 2025 12:44 PM IST

தமிழ்நாட்டில் பல்வேறு வகையான கோயில்களும், வழிபாட்டு தலங்களும் நிறைந்து காணப்படுகிறது. இங்கு ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினர் வழிபடும் இடங்களுக்கு சென்று சமூக நல்லிணக்கம் பேணுவதை கொண்டுள்ளனர். பல இடங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் பண்டிகை என்றால் மற்ற மதத்தினர் தங்களால் இயன்றதை செய்யும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இதுபோன்ற நெகிழ்ச்சியான நிகழ்வுகளை தென்மாவட்டங்களில் அதிகம் காணலாம். இப்படியான நிலையில் பல ஊர்களில் கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் அம்பாளுக்கு பின்னர் தான் முக்கியத்துவம் பெறும் சில இடங்களும் உண்டு. அந்த வகையில் தூத்துக்குடி (Thoothukudi) மாவட்டம் கோவில்பட்டியில் (Kovilpatti) அருள்பாலித்து வரும் செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனாத சுவாமி (Sri Shenbahavalli Amman Temple) திருக்கோயில் சிறப்புகள் பற்றி நாம் காணலாம்.

இந்த கோயில் கோவில்பட்டி நகரப்பகுதியில் பேருந்து நிலையத்திற்கு சற்று தொலைவில் மேடான பகுதியில் அமைந்துள்ளது. செண்பகவல்லி அம்மன் கோயில் காலை 6 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

கோயில் உருவான வரலாறு

சிவபெருமான் திருமணத்தின் போது பூமியின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. இதனை சமன் செய்யும் பொருட்டு அகத்திய முனிவரை, சிவபெருமான் பொதிகை மலையை நோக்கி பயணம் கொள்ளச் சொன்னார். வழியில் அகத்திய முனிவர் அரக்கர்களான வாதாபி மற்றும் வில்வணன் ஆகியோரால் தான் பெற்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க பெற்றார் . பொன்மலை முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று அகத்திய  தீர்த்தத்தை ஏற்படுத்திவிட்டு தன் பயணத்தை தொடர்ந்த அவர் வெள்ளிமலை சிவக்குழவைச் சேர்ந்த வாமனன் நந்தி தேவரின் சாபத்திற்கு ஆளானார்.

இதனால் வெப்ப கோட்டையில் வேந்தனாக பிறந்தார். பின்னர் செண்பக மன்னன் என பெயர் பெற்றார். இறைவன் ஆணைப்படி கோவிற்புரியையும் பூவநாதருக்கு கோயிலும் அமைத்து தன்னுடைய சாபத்திலிருந்து நிவர்த்தி பெற்றான். செண்பக மன்னனால் தோற்றுவிக்கப்பட்ட இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள அம்பாள் செண்பகவல்லி என்றும் பெயர் பெற்றாள். அவர் உருவாக்கிய கோவிற்புரி பிற்காலத்தில் கோவில்பட்டி எனவும் பெயர் பெற்றதாக வரலாறு சொல்கிறது.

செண்பகவல்லி அம்மனின் சிறப்புகள்

இந்த கோயிலில் செண்பகவல்லி அம்மனுக்கு தான் முக்கியத்துவம் முதலில் அளிக்கப்படுகிறது. அவரது சன்னதி நுழைவு வாயிலில் பிரம்மாண்டமான துவார பாலகிகள் அமைந்துள்ளனர். மற்ற கோயில்களில் நடைபெறுவது போல அலங்காரம் செய்யப்படும் நிலையில் இங்கு மட்டும் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் செண்பகவல்லி அம்மனை உட்கார்ந்தது போல் அலங்காரம் செய்கிறார்கள்.

இந்த கோயிலில் ராமர் சிவ வழிபாடு செய்ததாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பதுமன், சதுங்கன் என்ற இரு பாம்பு தலைவர்கள் பூவன பூக்களால் இறைவனை வழிபாடு செய்ததால் இங்குள்ள சிவனுக்கு பூவனநாதர் என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

சுமார் 7 அடி உயரத்தில் பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தும் வகையில் எழில் கொஞ்சும் தோற்றத்துடன் செண்பகவல்லி அம்பாள் காட்சி தருகிறார். இறைவனும் இறைவியும் கிழக்கு திசை பார்த்தபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் கோயில்களில் இதுவும் ஒன்றாகும். மேலும் சண்முகர், பஞ்சமுக விநாயகர், கன்னி விநாயகர், மகாலட்சுமி, சரஸ்வதி, பைரவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். அகத்திய முனிவர் உருவாக்கிய அகத்திய தீர்த்தம் இந்த கோயிலின் சிறப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

திருவிழாக்கள்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் சித்திரை தீர்த்தம் எனும் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதம் பிறப்பதற்கு முன்பாக பங்குனி மாதத்தின் கடைசி பத்து நாட்களில் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக பங்குனி மாதத்தின் கடைசி நாள் திருத்தேரோட்டம் நடைபெறும். அதேபோல் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் வசந்த உற்சவம், புரட்டாசியில் நவராத்திரி திருவிழா ஆகவே வெகு விமரிசையாக நடைபெறும்.

தென் மாவட்டத்தின் மிக முக்கியமான ஊர் கோவில்பட்டி என்பதால் இங்கு வருகை தரும் வெளியூர் மக்கள் கண்டிப்பாக செண்பகவல்லி தாயாரை வணங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் திருவிழா காலங்களில் ஒவ்வொரு சமூகத்தினரும் மண்டகப்படி செய்வது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் பல்வேறு மதத்தினரும் சித்திரை திருவிழாவின் தேரோட்டத்தை கலந்து கொண்டு சிறப்பிப்பது மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை சென்று வாருங்கள்.

Follow Us