Vaikasi Visakam: வைகாசி விசாகம்.. முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்!

வைகாசி விசாக தினத்தன்று, தமிழக முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அறுபடை வீடுகள் உட்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முருகப்பெருமானின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் இந்த தினத்தில் பக்தர்கள் பல்வேறு விதமான நேர்த்திக்கடன்களும் செலுத்தி வழிபடுகின்றனர்.

Vaikasi Visakam: வைகாசி விசாகம்.. முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. காத்திருந்து தரிசனம்!

வைகாசி விசாகம் கொண்டாட்டம்

Published: 

09 Jun 2025 08:09 AM

வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு கோயில்களில் காவல்துறை பாதுகாப்பு, சிறப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளது. தமிழ் கடவுள் என கொண்டாடப்படுபவர் முருகப்பெருமான். அத்தகைய முருகனுக்கு உள்ளூர் தொடங்கி உலகம் வரை சிறியது முதல் மிகப்பெரிய அளவிலான கோயில்களும் உள்ளது. அனைத்து கோயில்களிலும் முருகனுக்கு என தனி சன்னதி உள்ளது. இப்படியாக ஆன்மிக வரலாற்றில் தவிர்க்க முடியாத கடவுளாக திகழும் முருகப்பெருமான் பிறந்த தினமாக வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு வைகாசி விசாகம் திருவிழா 2025, ஜூன் 9 ஆம் தேதியான இன்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

முருகன் கோயில்களில் குவியும் கூட்டம் 

இப்படியான நிலையில் அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக அறுபடை வீடுகளாக அறியப்படும் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்சோலை,சுவாமி மலை, திருத்தணி ஆகிய 6 கோயில்களில் விடுமுறை நாளாக ஜூன் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதலே மக்கள் குவிய தொடங்கினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா மூலம் அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னையைப் பொறுத்தவரை கேகே நகர் திருச்செந்தூர் முருகன் கோயில், வடபழனி முருகன் கோயில், கந்தக்கோட்டம் பாலசுப்பிரமணியன் திருக்கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இறைவழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

வைகாசி விசாகம் வரலாறு


சூரபத்மன் என்னும் அரக்கனை அழிப்பதற்காக தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்க சிவபெருமான் தனது நெற்றிக்கண்ணிலிருந்து தீப்பொறி ஒன்றை உருவாக்கினார். இதன் மூலம் வலிமையுள்ள ஒருவனை உருவாக்கி அதனால் சூரபத்மான் அழிவான் என தெரிவித்தார். அந்த தீப்பொறியானது ஆறு பகுதிகளாக பிரிந்து கங்கை நதியில் பாய்ந்து சரவணப் பொய்கையில் கரையை அடைந்தது. அங்கு அத்தனை தீப்பொறிகளும் குழந்தைகளாக மாறியது. அவற்றை கார்த்திகை பெண்களிடம் வளர்க்கும் பொறுப்பை பார்வதி தேவி வழங்கினார். அவர்களின் வளர்ப்பில் வளர்ந்த ஆறு குழந்தைகள் ஆறு தலைகள், ஒரு உடலாக ஆறுமுகனாக காட்சியளித்தது. இப்படியாக அந்த குழந்தைகள் உருவான நாள் மற்றும் முருகப்பெருமான் ஆறுமுகங்களுடன் காட்சி கொடுத்த நாள் வைகாசி விசாகம் எனவும் புராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியாக முருகப்பெருமான் வைகாசி மாதத்தில் விசாகம் நட்சத்திரத்தில் பிறந்ததால் ஒவ்வொரு மாதத்தில் அந்த நட்சத்திரம் வந்தாலும், வைகாசி மாதத்தில் மட்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இறைவழிபாடு என்பது நம் மனதை, உடலை ஒருமுகப்படுத்தும் செயலாகும். பொறுமை என்பதை உணர்த்தும் கடவுள் வழிபாட்டில் விரதம், நேர்த்திக்கடன் போன்ற வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.