AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முருகன் வழிபாடு: பங்குனி உத்திரத்திருநாள் எப்போது வருகிறது?

Panguni Uthiram 2026: பங்குனி உத்திரம் இந்துக்களின் முக்கிய ஆன்மீக திருநாளாக கருதப்படுகிறது. முருகப் பெருமான் மற்றும் தெய்வயானையின் திருமணம் நடைபெற்ற நாளாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. 2026 ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் ஏப்ரல் 01 அன்று கொண்டாடப்படுகிறது. “ஓம் சரவண பவாய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது முக்கியமானதாக கூறப்படுகிறது.

முருகன் வழிபாடு: பங்குனி உத்திரத்திருநாள் எப்போது வருகிறது?
ஆறுபடை வீடுகளில் 3- ஆம் படை வீடான பழனிImage Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 13 Mar 2026 17:41 PM IST

இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்று பங்குனி உத்திரம். பங்குனி மாதத்தில் பெளர்ணமியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் இந்த உற்சவம் கொண்டாடப்படுகிறது. இது முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாளாகவும், விரத நாளாகவும் கருதப்படுகிறது. முருகப் பெருமான், இந்திரனின் மகனான தெய்வயானையை திருமணம் செய்து கொண்டது இந்த நாளில் தான் என புராணங்கள் கூறுகின்றன. அதனால் இந்த நாள் தெய்வீக திருமணத்தை நினைவுகூரும் திருநாளாகவும் பார்க்கப்படுகிறது. முருகப் பெருமானின் அருள் கிடைக்க வேண்டி பலரும் இந்த நாளில் விரதம் இருந்து வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. தமிழகத்தின் பல முருகன் கோவில்களிலும் இந்த நாள் சிறப்பு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் காவடி ஏந்தி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. இதனால் பங்குனி உத்திரம் ஆன்மீக உணர்வை அதிகரிக்கும் திருநாளாக கருதப்படுகிறது.

பல தெய்வங்களின் திருமண நாள் என கருதப்படும் திருநாள்

முருகப் பெருமான் மட்டுமின்றி சிவன்-பார்வதி, ஸ்ரீராமர்-சீதை, ரங்கநாதர்-ஆண்டாள் ஆகிய பல தெய்வீக திருமணங்களும் நடைபெற்ற நாளாக பங்குனி உத்திரம் குறிப்பிடப்படுகிறது. இதனால் இந்த நாள் குடும்ப ஒற்றுமை மற்றும் திருமண வாழ்வின் சிறப்பை நினைவூட்டும் நாளாகவும் கருதப்படுகிறது. திருமணமாகாத ஆண்-பெண்கள் இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதனால் பங்குனி உத்திர விரதத்திற்கு “கல்யாண விரதம்” என்ற பெயரும் வழங்கப்படுகிறது. திருமணமான தம்பதிகளும் இந்த நாளில் சிறப்பு பூஜைகள் செய்து தங்களின் வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டி வழிபடுவது வழக்கமாக உள்ளது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இந்த திருநாள் பக்தி உணர்வுடன் கடைப்பிடிக்கப்படுகிறது.

பங்குனி உத்திரம் 2026 – தேதி மற்றும் நேர விவரம்

பங்குனி உத்திரம் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. உத்திரம் நட்சத்திரம் மார்ச் 31 மாலை 03.20 மணிக்கு ஆரம்பமாகிறது. அது ஏப்ரல் 01 மாலை 04.17 மணிக்கு நிறைவடைகிறது. பெளர்ணமி திதி ஏப்ரல் 01 காலை 07.38 மணிக்கு ஆரம்பமாகி ஏப்ரல் 02 காலை 07.57 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேர அமைப்பின் அடிப்படையில் பங்குனி உத்திரம் வழிபாடு ஏப்ரல் 01 அன்று சிறப்பாக நடைபெறுகிறது. அந்த நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வதும் கவனிக்கப்படுகிறது.

பங்குனி உத்திரம் அன்று செய்யப்படும் வழிபாடுகள்

பங்குனி உத்திரம் அன்று முருகப் பெருமானிடம் வேண்டிய வரங்கள் கிடைக்க நெய் தீபம் ஏற்றி வைத்து, விரதம் இருந்து, பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் பால் அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பாக கருதப்படுகிறது. “ஓம் சரவண பவாய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது முக்கியமானதாக கூறப்படுகிறது. முழு உபவாசமாக விரதம் இருக்க முடியாதவர்கள் முருகப் பெருமானின் படத்தின் முன் அமர்ந்து மனதார “ஓம் சரவண பவ” மந்திரத்தை பலமுறை உச்சரித்து வழிபடலாம். குறைந்தது 108 முறை ஜபம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. மேலும் முருகனின் 108 சதநாமாவளிகளை சொல்லி அர்ச்சனை செய்வதும் வழக்கம். சர்க்கரை பொங்கல், பாயசம், பழங்கள், பஞ்சாமிர்தம், வெற்றிலை-பாக்கு மற்றும் தேங்காய் போன்றவற்றை நைவேத்தியமாக சமர்ப்பித்து வழிபடுவது பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

Follow Us