பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை.. கூட்ட நெரிசலில் சிக்கி 500 பேர் காயம்..

Puri Jagganath Rath Yatra: ஒடிசாவில் மாநிலம் பூரியில் இருக்கும் ஜெகன்நாதர் கோயில் தேர் திருவிழா நேற்று, ஜூன் 27, 2025 அன்று தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் தேரின் கயிறை இழுக்க முயற்சித்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை.. கூட்ட நெரிசலில் சிக்கி 500 பேர் காயம்..

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை

Published: 

28 Jun 2025 08:09 AM

ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் ரத யாத்திரை மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்த ரத யாத்திரையில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் வருகை தருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ரத யாத்திரையானது நேற்று அதாவது ஜூன் 27 2025 அன்று தொடங்கியது. இந்த ரத யாத்திரையின் போது ஜெகன்நாதர் சுவாமி தனது சகோதரர் பாலபத்ரா மற்றும் சகோதரி சுபத்ரா உடன் எழுந்தருளி தனித்தனியான தேரில் வலம் வருவார்கள். அந்த வகையில் ஜூன் 27 2025 அன்று நடைபெற்ற ரத யாத்திரையின் போது இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எட்டு பேரின் நிலை மோசமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரை:

ஒடிசா மாநிலத்தில் இருக்கக்கூடிய பூரியில் ஜெகன்நாதர் கோயிலில் நடைபெறும் ரத யாத்திரை என்பது உலக புகழ் பெற்றது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகை தருவார்கள். இந்த ஒரு நிகழ்வின் போது மட்டுமே சுவாமி ஜெகன்நாதர் கோயிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கோயிலில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு வரை இந்த ரத யாத்திரை மேற்கொள்ளப்பட்டு, கடைசியாக குண்டிச்சா மண்டபத்திற்கு கொண்டு செல்லப்படும்.

விழாக்கோலம் பூண்ட பூரி நகரம்:


பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரையை முன்னிட்டு அந்த நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கும். வண்ண மலர்களால், வண்ண விளக்குகளால் நகரமே ஜொலி ஜொலிக்கும். ரத யாத்திரையின் போது மூன்று பிரம்மாண்ட தேர்கள் இழுக்கப்படும். இந்த தேர்களை இழுக்க ஆயிரங்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கலந்து கொள்வார்கள். முதலில் பாலபத்ராவின் தேர் இழுக்கப்படும், அதனைத் தொடர்ந்து சுபத்ரா தேவியின் தேர் புறப்படும், இறுதியாக ஜெகன்நாதர் சுவாமி எழுந்தருளிய தேர் புறப்படும்.

இந்த திருவிழா ஒன்பது நாட்கள் நடைபெறும். பூரி ஜெகன்நாதர் தேர் திருவிழாவை முன்னிட்டு சுமார் 10,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் உடன் தீயணைப்பு துறையினர், வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவினர், சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரத யாத்திரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல்:


இந்த நிலையில் நேற்று அதாவது ஜூன் 27 2025 அன்று பூரி ஜெகன்நாதர் கோயிலின் ரத யாத்திரை தொடங்கியது. இந்த யாத்திரையில் சுமார் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரத யாத்திரை தொடங்கிய போது ஏராளமான பக்தர்கள் தேரை இழுக்க முயன்ற போது கூட்டு நெரிசல் ஏற்பட்டதாகவும் இதில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் எட்டு பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தேரின் கயிறுகளை பிடிக்க பக்தர்கள் முன்வந்த போது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.