Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

524 ஆண்டுகள் பழமையான திரிபுரசுந்தரி கோவில் – திறந்து வைத்த பிரதமர் மோடி

Tripura Sundari Temple: திரிபுரா மாநிலத்தில் கோமதி மாவட்டம் உதய்பூரில் அமைந்துள்ள 524 ஆண்டுகள் பழமையான திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சமீபத்தில் புதுப்பிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. இந்த நிலையில் கோவிலை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து வழிபாடு நடத்தினார்.

524 ஆண்டுகள் பழமையான திரிபுரசுந்தரி கோவில் – திறந்து வைத்த பிரதமர் மோடி
திரிபுர சுந்தரி கோவிலை திறந்துவைத்த பிரதமர் மோடி
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Sep 2025 18:36 PM IST

திரிபுரா மாநிலம்  கோமதி மாவட்டம் உதய்பூரில் அமைந்துள்ள 524 ஆண்டுகள் பழமையான திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் சமீபத்தில் புதுப்பிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி  (Narendra Modi) செப்டம்பர் 22, 2025 அன்று கோவிலை திறந்து வைத்து வழிபட்டார். இதற்காக ஆகர்தலா விமான நிலையம் வந்தடைந்த பிரதமரை, திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சாஹா மற்றும் ஆளுநர் இந்திரசேனா ரெட்டி நள்ளு ஆகியோர் வரவேற்றனர். பின்னர், அவர் மதியம் 3.30 மணியளவில் கோவில் வளாகத்தை வந்தடைந்த அவருக்கு, அங்கு பாரம்பரிய நடனங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் கோவிலை திறந்து வைத்து வழிபட்டார்.

திரிபுரசுந்தரி கோவிலின் வரலாறு

இந்த கோவிலானது ஆமை முதுகு போன்ற வடிவத்தில் 1501ஆம் ஆண்டு மணிக்யா வம்சத்தைச் சேர்ந்த மன்னர் தன்யா மணிக்யா என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோவிலின் வரலாறுப்படி, அந்நாட்டின் மன்னர் தனது கனவில் கடவுளின் உத்தரவைப் பெற்ற பின் இந்த  கோவிலை நிறுவியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும்.. மக்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்..

கோவிலில் முக்கிய தெய்வமான திரிபுரசுந்தரி அம்மனின்  ஐந்து அடி உயர சிலையும், சண்டி தேவியின் மற்றொரு சிலையும் உள்ளன. மணிக்யா அரசர்கள், வேட்டைச் செல்லும் போது மற்றும் யுத்தங்களுக்கு செல்லும் போதும் இந்த சண்டி தேவியின் சிலையைத் தங்களுடன் எடுத்துச் செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது.

பிரதமர் மோடிக்கு திரிபுராவில் உற்சாக வரவேற்பு

 

புதுப்பிக்கப்பட்ட கோவில் வளாகம்

மூன்று தளங்களில் அமைந்த இந்த புதிய கோவில் வளாகம் சுமார் 7,355 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் 6,784 சதுர மீட்டர் பரப்பளவில் லாபிகள், 86 கடைகள் மற்றும் பன்முக பயன்பாட்டு மண்டபங்கள் ஆகிய வசிதிகள் செய்யப்பட்டுள்ளன. முதல் தளத்தில் 2, 137 சதுர மீட்டர் பரப்பளவில் விடுதி அறைகள் மற்றும் சந்நியாசிகள் தங்கும் அறைகளும் உருவாக்கப்பட்டுள்ளது. மேல் தளத்தில் பக்தர்கள் பூஜை மற்றும் சடங்குகளை பார்க்கும் வகையில் மண்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை சுற்றிய 5 பெரிய நீர்நிலைகளும் உள்ளன. மாற்றுத்திறனாளி பக்தர்களின் வசதிக்காக ராம்ப் மற்றும் லிஃப்ட் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க  : ரூ. 34,200 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட பணிகள்.. குஜராத்தில் பிரதமர் மோடியின் திட்டம் என்ன?

கடந்த 2018 ஆம் ஆண்டு திரிபுரா மாநிலத்தில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பின், முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் கோவிலை புதுப்பிக்க புதிய அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அதன் பின்னர், கோவில் மிகப்பெரிய வழிபாட்டு மையமாக உருவாக்கப்படும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  பிரதமர் மோடி, திரிபுரா வருகைக்கு முன்பு அருணாசலப் பிரதேசத்திற்கும் பயணம் செய்து, ரூ.5,100 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.