மனப் பயிற்சி, சமநிலை மற்றும் அறிவே வெற்றிக்கான விசை: ‘பரீட்சா பே சர்ச்சா’வில் பிரதமர் மோடி
Pariksha pe charcha: “கல்வி ஒரு பாரமாக இருக்கக் கூடாது. முழுமையற்ற கல்வி வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்காது. மதிப்பெண்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், நமது வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இது வகுப்பறைகளுக்கும் தேர்வுகளுக்கும் அப்பாற்பட்டது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

கோப்பு புகைப்படம்
பிப்ரவரி 6, 2026: முதலில் உங்கள் மனதைப் பயிற்றுவிக்க வேண்டும்; அதன் பின்னர் அதனை ஒருமுகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ‘பரீட்சா பே சர்ச்சா’ நிகழ்ச்சியின் 9-ஆவது பதிப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடிய போது அவர் இதை தெரிவித்தார். இதைச் செய்தால், நீங்கள் எப்போதும் வெற்றிபெறுவீர்கள் என்றும் அவர் கூறினார். நமது இலக்கு எட்டக்கூடியதாக இருக்க வேண்டும்; ஆனால் மிக எளிதில் எட்டிவிடக்கூடியதாக இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.
கல்வி ஒரு பாரமாக இருக்கக் கூடாது:
“கல்வி ஒரு பாரமாக இருக்கக் கூடாது. முழுமையற்ற கல்வி வெற்றிகரமான வாழ்க்கைக்கு வழிவகுக்காது. மதிப்பெண்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், நமது வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். இது வகுப்பறைகளுக்கும் தேர்வுகளுக்கும் அப்பாற்பட்டது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேலும் படிக்க: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எண்ணிக்கை குறைவாக உள்ளது.. 807 பெண்கள், குழந்தைகள் கடத்தப்பட்ட விவகாரத்தில் டெல்லி போலீஸ் விளக்கம்!
மாணவர்களுடன் உரையாடும் போது, பிரதமர் மோடி ஒரு சம்பவத்தையும் பகிர்ந்துகொண்டார். “என் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று, ஒரு தலைவர் ‘உங்களுக்கு 75 வயது நிறைவடைந்துவிட்டது’ என்று சொல்லி அழைத்தார். அதற்கு, எனக்கு இன்னும் 25 ஆண்டுகள் உள்ளன என்று நான் அவரிடம் கூறினேன்” என்றார். “நான் கடந்துபோனதை எண்ணுவதில்லை; மீதமுள்ளதையே எண்ணுகிறேன்” என்றும் அவர் கூறினார் என தெரிவித்தார்.
இந்தியாவில் இணையக் கட்டணம் குறைவாக இருப்பதால் நேரத்தை வீணடிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். “சூதாட்டத்திற்கு எதிராக நான் ஒரு சட்டம் கொண்டு வந்தேன்; அதற்கு அனுமதி இல்லை. ஆனால் கேமிங் என்பது ஒரு திறமை. அதில் வேகமும் அடங்கியுள்ளது; எனவே அது வளர்ச்சிக்கு உதவும். இருப்பினும், உயர்தர கேமிங்கைத் தேர்ந்தெடுத்து, உங்கள் திறனை கண்டறிய முயற்சிக்க வேண்டும்” என்றார் என தெரிவித்தார்.
மேலும் படிக்க: மேகாலயா சுரங்க வெடிவிபத்து.. பிப்.9 ஆம் தேதி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
அறிவிலிருந்தே திறன் உருவாகிறது:
எல்லாவற்றிலும் சமநிலை அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். “ஒரு பக்கமாக சாய்ந்தால் நீங்கள் விழுவீர்கள். திறன்களும் அதுபோலவே. திறன்கள் இரண்டு வகை—ஒன்று வாழ்க்கைத் திறன்கள், மற்றொன்று தொழில்முறைத் திறன்கள். எதில்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டால், இரண்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதே என் பதில். படிப்பு, கவனிப்பு, அறிவை நடைமுறையில் பயன்படுத்துதல் ஆகியவை இல்லாமல் எந்தத் திறமையையும் பெற முடியுமா? திறமை அறிவிலிருந்தே தொடங்குகிறது; அதன் முக்கியத்துவம் குறைவானதல்ல” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.