மேகாலயா, பிப்ரவரி 6, 2026: மேகாலயாவின் கிழக்கு ஜெய்ன்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் நிகழ்ந்த நிலக்கரி சுரங்க வெடிப்பில் குறைந்தது 18 பேர் உயிரிழந்ததை தீவிரமாக எடுத்துக்கொண்ட மேகாலயா உயர்நீதிமன்றம், சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய அதிகாரிகளுக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை ஆட்சியரை பிப்ரவரி 9ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது.
மேகாலயா சுரங்க வெடிவிபத்து:
வெடிப்பு ஏற்பட்ட நேரத்தில் சுரங்கத்திற்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் உள்ளது என டிஜிபிஐ நொங்ராங் செய்தி நிறுவனம் PTI-க்கு தெரிவித்தார்.
நீதிபதிகள் எச்.எஸ். தாங்க்கியூ மற்றும் டபிள்யூ. டியெங்க்டோ ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, தாங்க்ஸ்கு பகுதியில் உள்ளதாக கூறப்படும் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிப்பு குறித்து ஊடக செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தன்னிச்சையாக (suo motu) வழக்கை எடுத்துக்கொண்டது.
மேலும் படிக்க: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல்… தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை!!
சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள்:
இந்த ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி இதேபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்ட சம்பவம் நடந்திருந்தும், அந்தப் பகுதியில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவது குறித்து நீதிமன்றம் கடும் கவலை தெரிவித்தது. இத்தகைய நடவடிக்கைகளைத் தடுக்க அமலாக்க அமைப்புகள் ஏன் தவறின என்ற கேள்வியையும் நீதிமன்றம் எழுப்பியது.
கிழக்கு ஜெய்ன்டியா ஹில்ஸ் மாவட்ட துணை ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும், சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் சுரங்க உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்களை அடையாளம் கண்டு கைது செய்யவும், தொடர்புடைய அனைத்து குற்றச்சான்றுப் பொருட்களையும் பறிமுதல் செய்யவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் படிக்க: 30% குறைந்த கட்டணத்தில் மத்திய அரசின் ‘பாரத் டாக்ஸி’.. ஓலா, உபருக்கு மாற்று வந்தாச்சு!!
மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் இயன்ற அளவு உடனடி உதவியும் மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படுவதை உறுதி செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
பிப்ரவரி 9 ஆம் தேதி விளக்கம் அளிக்க உத்தரவு:
பிப்ரவரி 9ஆம் தேதி காலை 10.30 மணிக்கு, எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களுடன் கிழக்கு ஜெய்ன்டியா ஹில்ஸ் மாவட்ட துணை ஆட்சியரும் காவல் கண்காணிப்பாளரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, சட்டவிரோத சுரங்கத் தொழில் தொடர்ந்து நடைபெற அனுமதிக்கப்பட்டது எப்படி என்பதை விளக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுகளை நிறைவேற்றத் தவறினால், மேலதிக உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.
மேலும், இந்த உத்தரவு நகலை உடனடியாக மின்னஞ்சல் மற்றும் தபால் மூலமாக கிழக்கு ஜெய்ன்டியா ஹில்ஸ் மாவட்ட துணை ஆட்சியருக்கும் காவல் கண்காணிப்பாளருக்கும் அனுப்பவும், அதே நாளில் அரசுத் தலைமை வழக்கறிஞருக்கும் ஒரு நகல் வழங்கவும் நீதிமன்றப் பதிவகத்திற்கு அறிவுறுத்தப்பட்டது.
